மக்களுக்கு மின்சார பட்டியலில் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கு மின்சார கட்டணத்தின் ஒரு பகுதியை ...
மக்களுக்கு மின்சார பட்டியலில் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கு மின்சார கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
யட்டியன்தொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதற்கமைய மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான பட்டியல்களின் தொகை பெப்ரவரி மாத பட்டியலின் கட்டணத் தொகையை விட அதிகமாயின் அந்த பாவனையாளர்களுக்கு பெப்ரவரி மாத பட்டியலின் பெறுமதியை குறித்த மூன்று மாதங்களுக்கு மாற்றீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின் கட்டணங்களை செலுத்தியுள்ள பாவனையாளர்கள் மேலதிகமாக பணம் செலுத்தியிருந்தால் அத்தொகை எதிர்வரும் மின் பட்டியல்களில் ஈடுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உரிய வரவு செலவு திட்டமொன்று இன்றி சாதாரண அமைச்சரவையொன்றை நடத்திக் கொண்டு, கடந்த மூன்று மாதங்களில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி அரசாங்கம் பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்திருந்த போதிலும், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் அரசாங்கம் எவ்வித வேலையையும் செய்யவில்லை என சில அரசியல் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தலின்போது மக்கள் உரிய பதில் வழங்குவர் என்றும் பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.
2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவடைந்த நாள் முதல் மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்து நாட்டை அபிவிருத்தி செய்து வெற்றிகரமாக முன்னோக்கி வந்த பயணம் 2015ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதுடன், பின்னோக்கி சென்ற நாட்டின் எதிர்கால பயணத்தை புதிய அரசாங்கமொன்றின் ஊடாக வெற்றிகரமாக ஆரம்பிக்கப் போவதாகவும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.