அவளுக்கு ஒரு வாக்கு எனும் தொனிப் பொருளில் பெண் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் தேவை மற்றும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் வேட்...
அவளுக்கு ஒரு வாக்கு எனும் தொனிப் பொருளில் பெண் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் தேவை மற்றும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் வகையிலும் அமைந்த நிகழ்வு அண்மையில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது மன்னார் மகளிர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஷீரி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம், க.ஞானகுணேஸ்வரி ,
உமாச்சந்திரா பிரகாஷ் மற்றும் மீரா அருள்நேசன் ஆகியோருடன் பல்வேறு பொது அமைப்புக்களைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு பெண்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதுடன் வாக்களிக்கப்பட வேண்டிய முறை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. பெண்கள் பொதுவாக கூர்ந்து அவதானிப்பவர்கள் அவர்களுக்கு வீடும் தெரியும்,நாடும் தெரியும் அடிப்படையாக பெண்களுக்கு உரிய பிரச்சனைகள், தேவைகள் தொடர்பில் அறிந்தவர்கள். ஆகவே பெண்களால் தான் பெண்களுக்கான தேவைகள் தீர்த்துவைக்க முடியும். இது கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தும் நிகழ்வல்ல. ஒவ்வொரு கட்சிகளுக்கும் உங்கள் தெரிவில் வாக்களிக்கும் போது அந்த கட்சியில் உள்ள பெண்ணையும் விருப்புவாக்கில் தெரிவுசெய்யுங்கள்.
ஆளுமையான பெண்களைத் தெரிவு செய்வதே சாதுரியமானது என வலியுறுத்தப்பட்டது. திறமையான பெண்களை நாம் தெரிவு செய்வதன் மூலம் பாரளுமன்றத்தில் உறுதியான மக்களின் நலனை பேசும் பெண்பிரதிநிதித்துவத்தை அங்கீகரிக்கச் செய்ய முடியும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெண்வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் பேசுகையில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமெனில் பெண்கள் பெண்களுக்கு வாக்களித்தாலே போதுமானது என்றார். 13பெண்களையே இதுவரையில் அனுப்பியிருக்கிறோம் எனில் அது குறைந்த சதவீதமே. என்னை நீங்கள் பாராளுமன்றம் அனுப்பினால் எனது கொள்கை வரப்புயர எனும் ஒளவை வாக்கு. நாம் விவசாயம், கல்வி,அடிப்படை வசதிகள் என பலவற்றிலும் உயர வேண்டும். இதற்காக நான் செயற்படுவேன் ஆகவே நீங்கள் இந்தமுறை உங்கள் தேவைகளை அறிந்து சிந்தித்து வாக்களியுங்கள் என கூறினார்.