தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தையும் அவர்களின் இருப்பையும் இடையில் வந்த புல்லுருவிகள் தீர்மானிக்க முடியாது என தமிழ் மக்கள் தேசிய முன்ன...
தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தையும் அவர்களின் இருப்பையும் இடையில் வந்த புல்லுருவிகள் தீர்மானிக்க முடியாது என தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும் கொழும்பு றோயல் கல்லூரியின் முன்னாள் உப அதிபருமான மாரிமுத்து கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கு என்பது தமிழர் தாயகப் பகுதி அது எப்போதும் இணைந்திருப்பதே தமிழ் மக்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னனான சங்கிலி மன்னன் சிங்கள மன்னனான வீரியபண்டாரத்திற்கு அடைக்கலம் கொடுத்தபடியால் யாழ்ப்பாண இராச்சியத்தை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது அடைக்கலம் புகுந்தவனை காக்க வேண்டும் என்ற தமிழ்ப் பண்பாட்டை குறித்த மன்னன் பறைசாற்றிய போதும் உள்நுழைந்தவனின் அடைக்கலம் பெற்றவனின் வஞ்சனைச் செயல்களினால் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.
தமிழர்களுடைய பண்பாடு கலாசாரம், நடத்தைக் கோலம் ஆகியன சிங்கள மக்களோடு வேறுபடுகின்ற நிலையில் தமிழர் ஒரு நாட்டுக்குள் இரு தேசமாக சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்குரிய ஆட்சி அதிகாரம் வேண்டும்.
சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழின குழுமம் திராவிட கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர் என்ற பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுவந்துள்ளது.
சிங்கள மொழிக்கு அல்லாத பெருமை தமிழ் சொற்களுக்கே கணப்படுகிறது சிங்கள மொழியிலேயே இரு மெய்கள் சேர்ந்துதான் ஒரு உயிர்மெய் எழுத்தை உருவாக்கும் ஆனால் தமிழ் மொழி ஒரு உயிரையும் ஒரு மெய்யையும் கொண்டு உயிர்மெய் எழுத்தை உருவாக்கும் அவ்வாறு தமிழ் மொழிக்கென தன்னிகரில்லாத இடத்தைக் கொண்ட தமிழ் மொழியானது இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலையுடன் ஒப்பிடும்போது மன வேதனையை ஏற்படுத்துகிறது
கிளிநொச்சி மாவட்டம் இலங்கையிலுள்ள கடைசி மாவட்டமாக கல்வியில் உள்ள போது இலங்கையில் உள்ள 104 வலயங்களில் தீவக வலயம் இறுதி இடத்தில் உள்ளமை தமிழர்களுடைய கல்வியின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.
கட்சிகளுக்குள் பிரிவு வேண்டாம் ஒற்றுமையாய் இருப்போம் என்கிறார்கள் ஒற்றுமையாக இருக்கும் காலப்பகுதியில் எதை நாம் சாதித்தோம் என்பதற்கு ஒற்றுமையை வலியுறுத்துவோர் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.