மாவை சேனாதிராசா மஹிந்தவுக்கு கடிதம் எழுதுகின்றாராம். இவர் என்ன காதல் கடிதமா எழுதுகின்றார். மஹிந்த ராஜபக்ஷ ஒரு ஆண், ஒரு ஆண் ஆணிற்கு காதல் ...
மாவை சேனாதிராசா மஹிந்தவுக்கு கடிதம் எழுதுகின்றாராம். இவர் என்ன காதல் கடிதமா எழுதுகின்றார். மஹிந்த ராஜபக்ஷ ஒரு ஆண், ஒரு ஆண் ஆணிற்கு காதல் கடிதம் எழுதலாமா? தேர்தல் காலம் தொடங்கியதில் இருந்து கூட்டமைப்பினருக்கு ஆண் பெண் வித்தியாசமே தெரியாமல் போயுள்ளது எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் சிவாஜிலிங்கம் அவர்கள் கூறினார்.
அண்மையில் சுழிபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் பின்வருமாறு தெரிவித்தார்,
சலுகைகளுக்காக தமிழ் மககளின் உரிமைகளை விற்றுப் பிழைப்பவர் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். அவர் மக்களது பிரச்சினைகள் பற்றிக் கவலையில்லாத ஒருவர்.
நடைபெறவிருக்கின்ற இந்தத் தேர்தல் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் பதினாறாவது தேர்தலாக அமைந்துள்ளது. முள்ளிவாய்க்காலிலே இனப்படுகொலை நடந்த பின்னர் மூன்றாவது தேர்தல் இது.
2010 மற்றும் 2015 காலப்பகுதியில் நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தான் பெருமளவிலான ஆதரவை வழங்கியிருந்தார்கள். வழங்கிய அந்த ஆதரவிற்கு கூட்டமைப்பினர் என்ன செய்தனர்?
2014ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் என்ற ஒன்றிற்கு முண்டு கொடுத்து ஆளும் கட்சியோடு சேர்ந்திருந்தனர் கூட்டமைப்பினர். அக் காலத்தில் நூற்றிற்கு குறைவான அரசியற் கைதிகளை விடுதலை செய்ய வக்கற்றவர்களாக காணப்பட்டார்கள். இவர்கள் தமிழ் மக்களுக்கு இனிமேலும் எதனைச் செய்யவார்கள்.
தற்போது சுமந்திரன் அவர்கள் பட்டியல் ஒன்றினைக் கொண்டு செல்கின்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம். அதற்கு முன்னரே டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு பட்டியலை பிரதமரிடம் கையளித்துள்ளார்.
இதற்கு முதலும் டக்ளஸ் அமைச்சுப் பதவியில் இருந்தார் தற்போதுள்ள ஆட்சியிலும் ஏழுமாத காலமாக அமைச்சராக இருக்கின்றார். இந்த அரசு ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலத்தில் எந்தப் பட்டியலையும் கொடுக்காத இவர்கள் தேர்தல் காலத்தில் ஒரு பட்டியலைக் கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கா நாடகம் போடுகின்றனர்- என அவர் கூறினார்.