அதிகரித்து வருகின்ற விபத்துக்கள் தொடர்பில் விபத்துக்கள் தொடர்பான புள்ளி விபரமொன்றை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியம...
அதிகரித்து வருகின்ற விபத்துக்கள் தொடர்பில் விபத்துக்கள் தொடர்பான புள்ளி விபரமொன்றை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்தள்ளதாக புள்ளி விபரங்களுடன் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையினதும் ஊடகத் தகவல்களின் பிரகாரமும் இன்று மாலை வெளியிட்டுள்ள அந்த புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..
இந்த மாதத்தின் கடந்த 21 திகதி முதல் 27 ஆம் திகதி வரையான ஒரு வாரத்தின் விபத்துக்கள் குறித்தே இந்த புள்ளி விபரத்தில் தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதற்கமைய கடந்த வாரம் வீதி விபத்துக்களால் 76 பேரும், ஏனைய விபத்துக்களால் 49 பேரும் தீ விபத்தினால் 4 பேரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்துக்களால் 9 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அந்த புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டள்ளது. அதாவது கடந்த 23 ஆம் திகதி மட்டும் யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரக்கேறி 5 மாதக் குழந்தை ஒன்றும், சங்கானையில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 33 வயது ஆண் ஒருவரும், கொடிகாமத்தில் தற்கொலை செய்து கொண்ட 26 வயதுடைய யுவதி ஒருவரும் உயிரிழந்ததுடன் கனகராயன் குளத்தில் அடிகாயங்களுடன் 70 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அதே போன்று 24 ஆம் திகதி வட்டுக்கோட்டையில் விசர்நாய்க் கடிக்ககுள்ளாகி 15 வயதுடைய ஆண் ஒருவரும், மன்னாரில் விசர் நாயக் கடிக்குள்ளாகி 39 வயதுடைய அண் ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.
அதே போல 25 ஆம் திகதி கோண்டாவிலில் 45 வயதுடைய பெண் ஒருவர் தற்கொலை, சுன்னாகத்தில் 42 வயதுடைய ஆண் ஒருவர் கூரை சரிந்து வீழ்ந்து மரணமடைந்துள்ளார். மேலும் 26 ஆம் திகதி கிளிநொச்சியில் மோட்டார் சைக்கில் விபத்தில் 25 வயதுடைய அண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதே வேளை கடந்த 01.07.2020 தொடக்கம் 31.07.2020 வரையான மாதாந்த நிலவரத்தையும் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளார். அதில் கடந்த மாதம் வீதி விபத்துக்களில் 194 பேரும். ஏனைய விபத்துக்களில் 160 பேரும், தீ விபத்தினால் 2 பேரும் காயமடைந்துள்ளதாகவும் அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.