நடந்து முடிந்த தேர்தல் மோசடியும், அரசியல் மற்றும் ஆயுதப் பலத்துடன் பலாத்காரமாக நடத்தப்பட்ட தேர்தல் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்....
நடந்து முடிந்த தேர்தல் மோசடியும், அரசியல் மற்றும் ஆயுதப் பலத்துடன் பலாத்காரமாக நடத்தப்பட்ட தேர்தல் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
சுமந்திரனால் பாதிக்கப்பட்ட மாமனிதர் ரவிராஜ் மனைவி சசிகலாவிற்கு நீதி கோர அனைத்து தரப்பினர்களும் கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் எனவும் கோரியுள்ள அவர், சசிகலா தேர்தல் ஆட்சேபணை மனு தாக்கல் செய்ய முன்வந்தால் அவருக்கான சட்ட உதவிகளை பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளதாக கூறினார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
பல இலட்சக்கணக்கான வாக்காளர்களை கொண்ட மாவட்டங்களின் முடிவுகள் மிக விரைவில் வெளியாகியிருந்தன. இருப்பினும் 5 இலட்சம் வரையான வாக்காளர்களை கொண்ட யாழ்ப்பாணத்தில் 4 இலட்சத்துக்கு குறைவான வாக்குகளே பதிவாகின. ஆனால் முடிவுகளை வெளியிடுவதில் கால இழுத்தடிப்பு நடந்துள்ளது.
இது தெரிவத்தாட்சி அலுவலர்உட்பட பலருக்கும், அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருந்து ஏதோ ஒரு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு கொண்டிருந்ததை எங்களால் உணர முடிந்தது.
இதற்கு எங்களிடம் பல சாட்சிகள் உள்ளன. அந்த சாட்சிகளை தகுந்த நேரத்தில் வெளியிடுவோம்.
விருப்பு வாக்கு எண்ணப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சிறிதரன், சித்தார்த்தன், சசிகலா போன்றவர்கள் முன்னணியில் இருந்தனர். இதன் பின்னர் சசிகலா பதவிவிலக வேண்டுமென அந்த கட்சியினரே அழுத்தங்களை கொடுத்திருந்தார்கள். இதனை ஏற்றுக்கொள்ளாத சசிகலா வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்தவறே தனது கையடக்க தொலைபேசியை எறிந்ததை தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்தன.
தொடர்ந்து தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் இழுத்தடிப்பு செய்யப்பட்ட காரணத்தால் நாங்கள் தேர்தல்கள் திணைக்கள தலைவரிடம் முறைப்பாடு செய்தோம்.
இந்த முறைப்பாடு தொடர்பிலும் உரிய பதில் வழங்கப்படவில்லை. இரவு10 மணியளவில் யாழ் தெரிவத்தாட்சி அலுவலர் மகேசனை சந்தித்து என் தாமதிக்கிறீர்கள் என வினவினோம்.
இதன்போது 11 வாக்கெண்ணும் அறைகளில் இருந்து விருப்பு வாக்கு விபரங்கள் கிடைக்கவில்லைனெ்றும், பளை உள்ளிட்ட 5 நிலையங்களில் சிறுசிறு பிரச்சனைகள் உள்ளன, அதை தீர்த்து விட்டு ஒரு மணித்தியாலத்தில் வெளியிடுவேன் என்றார்.
இருப்பினும் ஏறத்தாழ அதிகாலை 3.30 மணிவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இதன்பின்னர் கட்சித்தலைவர் என்.சிறிகாந்தாவுடன் நேரில் சென்று தெரிவத்தாட்சி அலுவலரை சந்தித்தோம். இதன்போது ஜனநாயகத்திற்கு எதிரான தவறான முடிவுகள் எடுப்பதை நாங்கள் விரும்பவில்லை, மக்களுடைய தீர்ப்பு தேர்தல் முடிவுகளில் வெளிப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். அதற்கு எந்த பதிலோ, முடிவை வெளியிடும் நோக்கமோ அவர்களிடம் இருக்கவில்லை.
இந்த நேரத்தில் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடக்கவில்லை. மாறாக மோசடி, அரசியல் மற்றும் ஆயுத பலத்துடன் நடத்தப்பட்ட பலாத்காரமாக நடத்தப்பட்ட தேர்தலாகவே பார்க்க முடியும்.
விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு, அவர்கள் எவ்வாறு நடத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல, சுமந்திரன் வருவார் பின்னே, எஸ்.ரி.எவ் வருவர் முன்னே என்பதை போல, அதிரடிப்படையினர் குவிக்கப்பட்ட பின்னரே சுமந்திரன் வருவார் என்பது தெரிந்தது.
வாக்கெண்ணும் நிலையத்தில் அமைதியான நிலைமை இருக்கவில்லை. தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமந்திரனின் உதவியாளர்கள் கைகாட்டி, மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. சசிகலாவின் புதல்வி, மருமகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அரசாங்கத்தின் உயர்அதிகாரிகளின் துணையுடன், அரச படையினரின் உதவியுடன் சுமந்திரன் மீட்டு செல்லப்பட்டார்.
இவை அப்பட்டமான ஜனநாயக மீறலாகும். சர்வாதிகார ஆட்சிக்கான முன்னோடிகளே இவை. இந்த அராஜகங்களிற்கு எதிராக, கட்சி பேதங்களை மறந்து மிகப்பெரிய அளவில் எதிர்ப்பினை அரசாங்கத்திற்கு காண்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்கள் தானாக பதவியிலிருந்து விலகும் வரை நாங்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சசிகலா விரும்பினால் தேர்தல் ஆட்செபணை மனுவிற்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் இலவசமாக செய்து கொடுக்க முடியும் என்றார்.