இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று முற்பகல் 9.30 மணி அளவில் ஆரம்பமானது. 2020 பொதுத் தேர்தலில...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று முற்பகல் 9.30 மணி அளவில் ஆரம்பமானது.
2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையை பெற்றுக் கொண்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அபே ஜனபல கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், முஸ்லிம் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இம்முறை நாடாளுமன்றத்தில் தலா ஒரு ஆசனத்தை பெற்றுள்ளன.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இதுவரையில் தெரிவு செய்யப்படவில்லை என்பதனால் குறித்த ஆசனங்கள் வெற்றிடமாகியுள்ளன.
நாட்டின் பழைமை வாய்ந்த மற்றும் பிரதானமான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற கன்னி அமர்வில் கலந்து கொள்ளாத முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை வழிமொழிந்தார்.
இதனூடாக புதிய சபாநாயகர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரது பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா அதனை வழிமொழிந்தார்.
இதனூடாக பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அங்ஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராக வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டார்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதன் படி தமிழ் முற்போக்கு கூட்டணி சார்ப்பாக மனோ கணேஷன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்ப்பாக அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துறை சந்திரகாந்தன் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிசாட் பதீயூதீன் , புளொட் கட்சியின் சார்பாக தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கன்னி அமர்வில் கருத்துரைத்தனர்.
இதனிடையே நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.
இதன் பின்னர் நாடாளுமன்றம் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.