புதியஅரசாங்கம் 28 அமைச்சரவை அமைச்சர்களையும் 30 ற்கும் மேற்பட்ட இராஜாங்க அமைச்சர்களையும் உள்ளடக்கி ஒரு பாரிய அமைச்சர் பட்டாளத்தை உருவாக்கியிர...
புதியஅரசாங்கம் 28 அமைச்சரவை அமைச்சர்களையும் 30 ற்கும் மேற்பட்ட இராஜாங்க அமைச்சர்களையும் உள்ளடக்கி ஒரு பாரிய அமைச்சர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கின்றது. புதிய அமைச்சரவையில் கடந்த காலத்தில் செயற்பட்ட இந்துமத விவகாரம்,அரசகரும மொழிகள் அமுலாக்கம், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஆகியஅனைத்து அமைச்சுக்களும் இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்டசெயல்களின் மூலம் பிறதேசிய இனங்களின் அடையாளத்தையும் இருப்பையும் அச்சுறுத்துவதுதான் ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தின் நோக்கமா என்ற கேள்வி எழுகின்றதென்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் அரசாங்கத்தின் இந்தப் போக்கைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
இந்திய-இலங்கைஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ் மொழி அரசகரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இதுவரை அது முழுமையாக நடைமுறையில் இல்லை என்பதும் அரசினுடைய பல்வேறு திணைக்களங்களிலும் அமைச்சுக்களிலும் இன்னமும் தனிச்சிங்களத்திலேயே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் தமிழாசிரியர்கள் உட்பட பல அரசதரப்பினரும் இன்னமும் சிங்கள மொழியிலேயே கடிதங்களையும் சுற்றுநிருபங்களையும் பெறுகிறார்கள் என்பதும் வெளிப்படையான உண்மை.
இவ்வாறான சூழ்நிலையில்,தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு அல்லது அரசகரும மொழி அமுலாக்கல் அமைச்சு என்பதை இல்லாமல் செய்தது என்பது தான் விரும்பியவாறு தனிச்சிங்களத்தில் அரசகருமங்களை நடாத்துவதற்கான ஓர் முயற்சியாகவே நாங்கள் கருதுகிறோம்.
அதனைப் போலவே, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக கடந்த அரசாங்கத்தில் பெயரளவிற்காகவது தேசிய நல்லிணக்க அமைச்சு என்றவொன்று உருவாக்கப்பட்டிருந்தது. இன்று அதுவும் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்துசமய கலாசாரஅமைச்சோ, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்கள் தொடர்பான அமைச்சுக்களோ உருவாக்கப்படவில்லை என்பதும் இந்த அரசாங்கத்தினுடைய சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
பௌத்த சிங்கள வாக்குகளால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கமானது 19ஆவது திருத்தத்தை மாற்றுவது,13ஆவது திருத்தத்தை மாற்றுவது,புதியஅரசியல் சாசனத்தை கொண்டு வருவதென்று பல்வேறுபட்ட கருத்துருவாக்கங்களில் ஈடுபட்டு வருகின்ற அதேசமயம், ஒரு குடும்ப ஆட்சியை உருவாக்க கூடியவகையிலும் அந்த குடும்ப ஆட்சியினூடாக சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தக்கூடிய வகையிலும் செயற்பட்டு வருகின்றது.
இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் அண்மைக்காலமாக எடுத்துவரும் ஒவ்வொரு முடிவுகளும் நடவடிக்கைகளும் சிறுபான்மை தேசிய இனங்களை அழித்தொழிக்கும் அடிப்படையிலும் அவர்களின் இருப்புக்களை கேள்விக்குள்ளாக்கும் அடிப்படையிலுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட தொல்பொருள் சின்னங்களை அடையாளமிடுவதற்கும் பாதுகாப்பதற்கும் முழுக்க முழுக்க பௌத்த சிங்கள மேலாதிக்கசிந்தனையில் மூழ்கித் திளைக்கின்ற அதிகாரிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி செயலணியை உருவாக்கியதென்பதும், வடக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிப்பதும் அதேபோன்று படையினர் தமிழ் மக்களுக்கு உரித்தானலகாணிகளை பலாத்காரமாக பறித்து வருவதும் இங்கு குறிப்பிடவேண்டிய விடயங்கள் என்பதுடன், காலாதிகாலமாக செய்கைசெய்யப்பட்டு வந்த வயல் நிலங்கள் உட்பட தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் மிகப்பெருமளவில் வனவளப் பாதுகாப்புக்கும் வனஜீவராசிகள் பாதுகாப்பிற்குமாக தான்தோன்றித்தனமான முறையில் பறிமுதல் செய்யப்படுவதையும் பார்க்கின்றோம்.
தமிழ் மக்கள் தமது உயிர்ப்பாதுகாப்புக்கு அச்சப்படுவதற்கும் மேலாக,தமது வாழ்வாதாரங்கள்,காணிகள்,நிலங்களென அனைத்தும் அவர்களின் கைகளை விட்டுப் பறிக்கப்படும் ஒரு அச்ச சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கக்கூடிய எவரும் தமிழ் இனவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் பிரபாகரனின் வாரிசுகள் என்றும் முத்திரைகுத்தப்படுகின்றார்கள்.
ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவருமே சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான பல்வேறுபட்ட கொள்கைகளை வெளியிடுபவர்களாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். ஒரேநாடு ஒரேசட்டம் என்று பேசுபவர்கள், இந்த நாட்டில் பல்வேறுபட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன. அவர்களுக்கான மத,கலாசார,பண்பாட்டு அடையாளங்கள் இருக்கின்றன என்பதுடன், அம் மக்களுக்கான பாரம்பரியமிக்க தேசவழமைச் சட்டங்களும் அவர்களது மத விழுமியங்களை காப்பதற்கான சட்ட திட்டங்களும் இருந்து வருகின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல இலட்சம் மக்களை இழந்து அவர்கள் போராடி வந்துள்ளனர் என்பதை மறந்து,அவ்வாறானவர்களின் கருத்துக்களைத் தூக்கியெறிந்து அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், இவர்கள் எதேச்சாதிகாரமாக நடப்பதென்பது இந்தநாட்டில் இனங்களுக்கிடையில் மேலும் மேலும் விரிசல்களை உருவாக்குவதற்கே உதவும் .