நல்லூர் பிரதேச சுகாதார அதிகாரி பிரிவில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் 25 வயதுட...
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனம் கொண்டு சென்று நிலையில் சந்தை மூடப்பட்டதால் அவரை மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார். அங்கு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவரது மாதிரி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அவருக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வீடு திரும்பிய அவர் நல்லூர் மருத்துவ சுகாதார அதிகாரியின் அறிவுறுத்தலில் அவர் தொடர்ந்து சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
அவரிடம் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மாதங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவருக்கு நாளை பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
மினுவாங்கொட பகுதியில் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று கொத்தணி கண்டறியப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் 11ஆவது நபர் இன்று இனங்காணப்பட்டுள்ளார்.