முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்றாளருடன் தொடர்புடைய 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.க...
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்றாளருடன் தொடர்புடைய 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பில் மரக்கறி மொத்த வியாபார வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடைய 65 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேருமாக 194 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுமாறாக 416 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்றுமுன்தினம் வெளியான முடிவுகளில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
தொற்றுக்குள்ளான நபர் தம்புள்ள பகுதிக்கு சென்று மரக்கறிகளை வாங்கி வந்து புதுக்குடியிருப்பு உடையார்கட்டு விசுவமடு சந்தை வியாபாரிகளுக்கு வழங்கும் நபர் என முதற்கட்ட விசாரணைகளில் உறுதியாகியது.
இதனையடுத்து அவர் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தை வளாகம் மற்றும் வர்த்தக தொகுதிகளை கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதுடன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மேலதிக சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து புதுக்குடியிருப்பு விசுவமடு உடையார்கட்டு உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள சந்தைகளின் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பல இடங்களிலும் உள்ள மீன் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.
குறித்த நபர் சமூகத்தில் பல பிரதேசங்களில் நடமாடி இருப்பதனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.