பழம்பெரும் கிராமமான மயிலிட்டியில் சிவபூமி அறக்கட்டளையினரால் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி கந்தபுராண ஆச்சிரமம் இன்று வியாழக்கிழமை(28) சம்பிரதாயபூர...
பழம்பெரும் கிராமமான மயிலிட்டியில் சிவபூமி அறக்கட்டளையினரால் அமைக்கப்பட்டுள்ள சிவபூமி கந்தபுராண ஆச்சிரமம் இன்று வியாழக்கிழமை(28) சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இன்று வியாழக்கிழமை காலை-09 மணி முதல் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் ஆச்சிரமத் திறப்பு விழா நிகழ்வுகள் இடம்பெற்றது.
கலியுக வரதனாம் கந்தப் பெருமானுக்கு உகந்த தைப்பூச நன்னாளான இன்றைய தினம் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சூழலில் அமைக்கப்பட்டுள்ள கந்தபுராண ஆச்சிரமம் இன்று திறப்பு விழா நடந்தது
கந்தபுராண கலாசாரத்தைப் பாதுகாக்கவும், ஆன்மீக சமூகப் பணிகளை விருத்தி செய்வதற்காகவும் யாழ்.மயிலிட்டியில் ஆதி மயிலிட்டி எனும் பகுதியில் சிவபூமி கந்தபுராண ஆச்சிரமம் உருவாக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டியைச் சேர்ந்த பொறியியலாளரான மகேசன் சுகுமாரனும், அவரது தம்பியாரும் இணைந்து சிவபூமி அறக்கட்டளைக்கென அன்பளிப்பாக வழங்கிய காணியும், மேல்மாடி வீடும் நீண்ட காலமாக இராணுவ வசமிருந்தது.
கடும் முயற்சியின் பின்னர் சிவபூமி அறக்கட்டளையினரால் குறித்த காணி இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்டது. பின்னர் பல இலட்சம் ரூபா நிதிப் பங்களிப்பில் குறித்த வீடு புனர்நிர்மாணம் செய்யப்பட்டதுடன் புதிதாகவும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி ஆச்சிரமத்தில் கந்தபுராண நூல்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் கந்தபுராணப் படிப்பில் ஈடுபடுகின்றவர்கள் ஆச்சிரமத்தில் வந்தமர்ந்து படிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பெளர்ணமி தோறும் அன்னதானப் பணிகளும் இடம்பெறும்.
இதேவேளை, சிவபூமி கந்தபுராண ஆச்சிரமக் கட்டடத்தின் அரைவாசிப் பகுதியில் லண்டன் அபயம் மருத்துவ சேவையினரால் மயிலிட்டிக் கிராம மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அறநெறிப் பாடசாலை மற்றும் பாலர் பாடசாலைகளும் ஆச்சிரமக் கட்டடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. மயிலிட்டிக் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறார்களுக்கு எங்களால் ஆன உதவிகளை சிவபூமி அறக்கட்டளையால் மேற்கொள்ளவுள்ளோம்.
அத்துடன் கிராமத்தின் மூத்தோர்கள் தினமும் மாலை வேளையில் சந்தித்து உரையாடுவதற்கான மூத்தோர் சந்திப்புக்கான இடமும் உருவாக்கப்படவுள்ளது.
29 வருடங்களாக மக்கள் நடமாட்டமே இன்றி இருந்த மயிலிட்டி எனும் பழம்பெரும் கிராமம் அழிந்து போய்விடக் கூடாது. சீரான வகையில் இந்தக் கிராமம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் தான் சிவபூமி கந்தபுராண ஆச்சிரமத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.