இலங்கையின் விவசாய அபிவிருத்தியை நோக்கிய விவசாய ஆராய்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை மேம்படுத்தும் முகமாக ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சு...
இலங்கையின் விவசாய அபிவிருத்தியை நோக்கிய விவசாய ஆராய்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை மேம்படுத்தும் முகமாக ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுமார் 2,400 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் நிறுவப்பட்டுள்ள விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கட்டடத்தொகுதியானது நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா அழைப்பின் பேரில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே. கபிலசி. கே. பெரேரா மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோரின் பிரசன்னத்தில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிராசு கியாமா ஆகியோரால் இக் கட்டடத் தொகுதி கூட்டாக திறந்து வைக்கப்படும்.
குறித்த வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் இராகவன் உட்பட அரசியல் பிரமுகர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் நலன் விரும்பிகள் எனபலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு இலங்கை, ஜப்பான் அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட நிதியுதவி ஒப்பந்தம் ஒன்றிற்கமைவாக மேற்படி கட்டட தொகுதியானது அமைக்கப்பட்டுள்ளதுடன் விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளுக்கு தேவையான நவீன ஆய்வுகூட உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் இயந்திர உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் அவ்வுபகரணங்களை உபயோகித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வது சம்பந்தமாக விவசாயபீட விரிவுரையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகளும் ஜப்பானிய பேராசிரியர்களினால் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டுள்ள நவீன ஆய்வுகூட வசதிகள் விவசாய பீடத்தின் பங்களிப்புடன் இலங்கையின் விவசாய அபிவிருத்தியில் முக்கியமாக வடபகுதியில் விவசாய அபிவிருத்திக்கு முக்கிய பங்காற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.