இலங்கை செஞ்சிலுவை சங்கம் கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் சுமார் 10 இலட்சம் பேர் வரை தமது உதவித் திட்டங்களை வழங்கி உள்ளதாக செஞ்சிலுவை சங...
இலங்கை செஞ்சிலுவை சங்கம் கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் சுமார் 10 இலட்சம் பேர் வரை தமது உதவித் திட்டங்களை வழங்கி உள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் ஜால் கிளை தலைவர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள யாழ் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை செஞ்சிலுவை சங்க மாநாடு யாழ்ப்பாணத்தில் 1958ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு மக்களுக்கு தொடர்ந்து தன்னாலான சேவைகளை வழங்கி வருகிறது.
போர் காலத்தின் போதும் இயற்கை அனர்த்தங்களின் போதும் அல்லல்படும் மக்களுக்காக உடனடி உதவிகளை வழங்கியதுடன் அவர்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் எமது சங்கம் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கியது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட புரவிப்புயல் தாக்கத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை செலவு செய்துள்ளது.
புரவிப் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பாதிப்படைந்த குடிநீர்க் கிணறுகளை சுத்தம் செய்வது நோக்குடன் இனங்காணப்பட்ட 500கிணறுகளில்
450 கிணறுகள் சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் கொரோனா அனர்த்த நிலைகளின் போது பாடசாலைகள்,பொலிஸ் நிலையங்கள். கைதடி முதியோர் இல்லம் மற்றும் வைத்தியசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.
விசேடமாக யாழ் கல்வித் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான முகக் கவசம் மற்றும் கிருமி நீக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து இருந்ததுடன் பாடசாலைகளில் கொரோன விழிப்புணர்வுப் பிரிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது.
ஆகவே இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் ஆனது பாதிக்கப்பட்ட மக்களை சமூகத்துடன் இணைக்கும் செயற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டு வருவதுடன் இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது சேவையை விஸ்தரித்து சிறப்புடன் வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்