இலங்கையில் கொவிட் பரவலை அடுத்து, எதிர்வரும் 30ம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை மூட அரசாங்கம் இன்று (27) தீர்மானித்தது. இந்த நில...
இலங்கையில் கொவிட் பரவலை அடுத்து, எதிர்வரும் 30ம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை மூட அரசாங்கம் இன்று (27) தீர்மானித்தது.
இந்த நிலையில், எதிர்வரும் மே மாதம் 3ம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் அனைத்தும் வழமை போன்று ஆரம்பிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
நாட்டில் வேகமாக பரவிவரும் கொவிட் தொற்று காரணமாகவே இந்த கேள்வி தற்போது பலரது மனங்களிலும் எழுகின்றது.
இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுமா என நாம் ஆராய்ந்தோம்.
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்த சந்தேகத்திற்கான பதிலை இன்று வெளியிட்டார்.
சுகாதார அதிகாரிகள், மாகாண கல்வி அதிகாரிகள், வலய கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தி, எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளை ஆரம்பிக்க முடியுமா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மாணவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எட்டியதன் பின்னரே, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்