Russia-Ukraine crisis: 3ஆம் நாள்: உக்ரைனில் செச்செனிய போராளிகளும் களமிறக்கம்!

Russia-Ukraine crisis: 3ஆம் நாள்: உக்ரைனில் செச்செனிய போராளிகளும் களமிறக்கம்!

♦உக்ரைனிய அதிகாரிகள், இராணுவத்தினரின் உளஉறுதியை உடைக்கும் இரகசிய உளவியல் யுத்தத்தை ரஷ்யா ஆரம்பித்துள்ளதாக உக்ரைனிய அரச புலனாய்வுத்துறை எச்சர...

♦உக்ரைனிய அதிகாரிகள், இராணுவத்தினரின் உளஉறுதியை உடைக்கும் இரகசிய உளவியல் யுத்தத்தை ரஷ்யா ஆரம்பித்துள்ளதாக உக்ரைனிய அரச புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

♦தலைநகர் கீவ்வின் எல்லைகளில் தெருச்சண்டைகள் நடந்து வருகிறது.

♦தலைநகரை பாதுகாக்க பெற்றோல் குண்டு தயாரித்து ரஷ்ய இராணுவத்தை தாக்கும்படி மக்களிடம் உக்ரைன் கோரிக்கை

♦தான் சரணடைந்து விட்டதாக பரப்பப்படும் தகவல் போலியானது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகள் முறிந்ததை அடுத்து தாக்குதல் மீண்டும் தொடங்கியதாக கிரெம்ளின் கூறுகிறது.

பேச்சு முற்சிக்காக உக்ரைன் மீதான தாக்குதலை இடைநிறுத்தியதாகவும், எனினும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரஷ்ய துருப்புக்கள் மீண்டும் உக்ரைனுக்குள் முன்னேறத் தொடங்கியுள்ளன என்று கிரெம்ளின் கூறுகிறது.

ஒரு செய்தியாளர் மாநாட்டில் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைனின் தலைமை “பேச்சுவார்த்தைக்கு மறுப்பதாக” குற்றம் சாட்டினார்.

வெள்ளியன்று, பேச்சுக்காக தனது பிரதிநிதிகளை பெலாரஸுக்கு அனுப்ப புடின் தயாராக இருப்பதாக பெஸ்கோவ் கூறினார். அதற்கு பதிலாக வார்சாவில் பேச்சு நடத்த உக்ரைன் முன்மொழிந்ததாகவும், உக்ரேனிய தரப்பினர் அமைதியாக இருந்ததால், சந்திப்பு பற்றிய பேச்சுவார்த்தைகள் உடன்பாடு இல்லாமல் முடிவடைந்ததாகவும் அவர் கூறினார்.

“பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தரப்பு மறுத்ததால், ரஷ்யப் படைகளின் முன்னேற்றம் இன்று பிற்பகல் மீண்டும் தொடங்கியது” என்று பெஸ்கோவ் சனிக்கிழமை செய்தி மாநாட்டில் கூறினார்.


உக்ரைனில் தனது படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் செச்செனிய தலைவர் ரம்ஜான் கதிரோவ் தெரிவித்துள்ளார்


துருக்கிக்கு நன்றி சொல்லும் உக்ரைன் ஜனாதிபதி

துருக்கியின் “இராணுவ மற்றும் மனிதாபிமான” ஆதரவிற்காக உக்ரைன் ஜனாதிபதி தனது துருக்கிய பிரதிநிதி மூலம், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுக்கு நன்றி தெரிவித்தார்.

“ரஷ்யாபோர்க்கப்பல்கள் கருங்கடலுக்கு செல்வதற்கான தடை” தனது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

மத்திய தரைக்கடலை கருங்கடலுடன் இணைக்கும் டார்டனெல்லெஸ் மற்றும் போஸ்பரஸ் ஜலசந்தியைக் கட்டுப்படுத்தும் துருக்கி, அத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உக்ரைன் கோரி வருகிறது.

எனினும், ரஷ்ய போர்க்கப்பல்களுக்கு எந்த தடையும் விதிக்கப்பட்டதாக பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.

வெள்ளிக்கிழமை துருக்கியின் வெளியுறவு அமைச்சர், இந்த விஷயத்தை உள்ளடக்கிய 1936 மாநாட்டின் கீழ், கருங்கடலில் உள்ள சொந்த தளத்திற்குத் திரும்பும் போர்க்கப்பல்களை ஜலசந்தி வழியாகச் செல்வதை அங்காராவால் தடுக்க முடியாது என்று கூறினார்.

கருங்கடலில் ரஷ்யாவின் முக்கிய கடற்படை தளம் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையளித்து ஆதரவளிங்கள்: ஜெலென்ஸ்கி

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் பதவியை வழங்குவதே, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவதற்கான முக்கிய ஆதாரம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

“நான் இதை முடிந்தவரை வெளிப்படையாகச் சொல்கிறேன். உக்ரைன் மக்கள் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களைப் பெறுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர். இது நம் நாட்டிற்கான ஆதரவின் முக்கிய சான்றாக இருக்கும். உக்ரைனின் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருப்பது குறித்து ஒருமுறை விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நான் சார்லஸ் மைக்கேல், உர்சுலா வான் டெர் லேயன், இம்மானுவேல் மக்ரோன் ஆகியோருடன் இதைப் பற்றி விவாதித்தேன்” என்று ஜெலென்ஸ்கி சனிக்கிழமை ஒரு உரையில் கூறினார்.

உக்ரைனை விட்டு வெளியேறும் மகள். வயதுக்கட்டுப்பாடு காரணமாக வெளியேற முடியாத தந்தை விடை கொடுக்கிறார்.

ரஷ்யா ஆரம்பித்துள்ள உளவியல் யுத்தம்!

ரஷ்யப் புலனாய்வு அமைப்பினர் உக்ரைனின் உயர்மட்ட அதிகாரிகளிடையே தகவல் மற்றும் உளவியல் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, உக்ரைனிய அரச புலனாய்வுப் பணியகம் (SBI) தெரிவித்துள்ளது.

இந்தகைய நடவடிக்கைகளிற்கு பலியாக வேண்டாமென, அரச பிரமுகர்கள், அதிகாரிகளிற்கு இன்று அறிவித்துள்ளது.

“பணியாளர்களின் மன உறுதி மற்றும் உளவியல் நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் தவறாக வழிநடத்தும் நோக்கில் ரஷ்யா தகவல் மற்றும் உளவியல் சிறப்பு செயல்பாடுகளை தீவிரமாக நடத்தி வருகிறது” என்று SBI தெரிவித்துள்ளது.

குறிப்பாக, போர் தொடங்குவதற்கு முன்னதாக, ஜே.எஃப்.ஓ மண்டலத்தில் உள்ள உக்ரைனிய இராணுவப் பிரிவுகளிற்கு அனாமதேய எஸ்எம்எஸ்கள் வந்தது. அவர்களது அதிகாரிகள் தப்பிச் சென்று விட்டதாகவும், ரஷ்யாவை எதிர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உக்ரைனின் தலைநகரை கைப்பற்றி, தலைமையை கட்டுப்படுத்த ரஷ்யா மேற்கொண்ட நகர்வு தோல்வியடைந்த பிறகு, ரஷ்ய உளவுத்துறையினர் தங்கள் தந்திரோபாயங்களை மாற்றி புதிய நிலைக்கு நகர்ந்துள்ளனர். இப்போது எம்.பி.க்கள், உயர்மட்ட அதிகாரிகள், சட்ட அமலாக்க நிறுவனங்களின் தலைவர்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் ஒத்துழைப்பு முன்மொழிவுகளுடன் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் பெறத் தொடங்கியுள்ளனர்” என்று SBI தெரிவித்துள்ளது.

பணியகத்தின் கூற்றுப்படி, உக்ரேனிய அதிகாரிகளை ரஷ்யாவிற்கு ஆதரவாக செயல்பட வற்புறுத்தப்படுகின்றனர். அதை செய்யாவிட்டால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்துகின்றனர்.

“அதிகாரிகள் இத்தகைய ஆத்திரமூட்டல்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம், அவர்களின் சத்தியத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் மற்றும் உக்ரேனிய மக்களின் ஆன்மாவின் வலிமையை நம்ப வேண்டும்” என்று SBI கூறியது.


தலைநகரில் தெருச்சண்டை!

உக்ரைனின் மீது படையெடுத்துள்ள ரஷ்யப் படைகள், இன்றைய 3ஆம் நாளில் தலைநகரான கீவில் வீதிச் சண்டையில் ஈடுபட்டுள்ளன.நகரத்தை நெருங்கியுள்ள ரஷ்யப் படைகளுடன், உக்ரேனிய படைகள் மூர்க்கமாக மோதி வருகின்றன.

சனிக்கிழமை விடியற்காலையில், கீவில் ரஷ்யப் படைகள் எவ்வளவு தூரம் முன்னேறினார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

ரஷ்யப் படைகள் நகருக்குள் நுழைவதை தடுப்பதில் வெற்றி பெற்றதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ஆனால் தலைநகருக்கு அருகில் சண்டை நீடித்தது.

ஏறக்குறைய மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தின் எல்லையில் மோதல் நடந்து வருகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடக்கும் மிகப்பெரிய தரைப் போரில் மொத்தமாக எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. உக்ரைன் வெளியிடும் புள்ளிவிபரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இராணுவப் பொலிஸ், தேசியக் காவலர்கள் மற்றும் தன்னார்வலர்களை உள்ளடக்கிய உக்ரேனியப் படைகளால் ரஷ்ய துருப்புக்கள் இதுவரை நகருக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டுள்ளதாக கீவி நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ சனிக்கிழமை தெரிவித்தார்.

“இப்போது நாசகார குழுக்கள் கீவ்வில் செயல்படுகின்றன, பல மோதல்கள், துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன,” என்று அவர் கூறினார்.

காலை 6 மணி நிலவரப்படி, இரண்டு குழந்தைகள் உட்பட 35 பேர் காயமடைந்தனர். அனைவரும் அமைதியாக இருக்கவும், தங்குமிடங்களில் தங்கவும் கேட்டுக் கொள்கிறேன். வான் தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

சனிக்கிழமையன்று கீவ்வில் குடியிருப்பு கட்டிடத்தை தாக்கிய ஏவுகணையால் யாரும கொல்லப்படவில்லையென்பது உறுதியானது. உள்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஹெராஷ்செங்கோ, குடிமக்களின் உள்கட்டமைப்புக்கு ஷெல் தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்யா பொய் சொல்கிறது என்றார். அவரது கூற்றுப்படி, இதுபோன்ற குறைந்தது 40 தளங்கள் தாக்கப்பட்டன மற்றும் ரஷ்ய துருப்புக்கள் பொதுமக்கள் தளங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தின.

நாடு முழுவதும் சண்டை நடந்து வருவதாகவும், ஆனால் தலைநகரில் “மோதலின் சக்தி நில அதிர்வு நிலையை எட்டியுள்ளது” என்றும் அவர் கூறினார்.

“அதிர்ச்சி, வலி ​​அளவிட முடியாதது, என்ன நடக்கிறது என்பதை விவரிப்பது மிகவும் கடினம்” என்று மேலும் கூறினார்.

பல பொதுமக்கள் நிலத்தடி தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்ததாக அவர் கூறினார். நகர குடியிருப்பாளர்களை வீடுகளில் தஞ்சம் அடையுமாறும், ஜன்னல்களிலிருந்து விலகி இருக்குமாறும், குப்பைகள் அல்லது தோட்டாக்கள் பறக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர். நகரின் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் மெட்ரோ ஆகியவை செயல்படுவதாகவும், கீவைச் சுற்றி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிட்ச்கோ கூறினார்.

ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிவித்தலில், உக்ரைன் குடிமக்கள் நாட்டைப் பாதுகாக்க வலியுறுத்தியுள்ளார். இதற்காக முன்வரும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் என்று கூறினார். வியாழன் முதல் கீவ் பகுதியில் மட்டும் 18,000 துப்பாக்கிகள் வெடிமருந்துகளுடன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க பெட்ரோல் குண்டுகளை தயாரிக்குமாறு கீவ் குடியிருப்பாளர்களிடம் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

ரஷ்ய படையெடுப்பின் போது மூன்று குழந்தைகள் உட்பட 198 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ சனிக்கிழமை தெரிவித்தார். மேலும் 33 குழந்தைகள் உட்பட 1,115 பேர் காயமடைந்துள்ளனர் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதினார்.

இந்த புள்ளிவிவரங்களில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இருவருமே அடங்குவர்களா என்பதை அவரது அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.


‘எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல’: அமெரிக்காவிற்கு சொன்னார் உக்ரைன் ஜனாதிபதி!

ரஷ்ய படைகள் நெருங்குவதால் கீவ் நகரிலிருந்து வெளியேறுங்கள் என்ற அமெரிக்காவின் ஆலோசனையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்துவிட்டார்.

ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால், ‘தலைநகர் கீவ் நகரிலிருந்து வெளியேறுங்கள்’ என்று உக்ரைன் ஜனாதிபதிக்கு ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. ஆனால் ஜெலன்ஸ்கி இந்த ஆலோசனை ஏற்க மறுத்திருக்கிறார். “சண்டை இங்கேதான் நடக்கிறது. எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல” என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார் என்று ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

(முழுமையான செய்திக்கு)


தான் சரணடைந்து விட்டதாக வெளியான தகவல்களை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

‘போலிகளை நம்பாதீர்கள்’ என தனது ருவிட்டரில் இதனை பதிவிட்டுள்ளார்.

உக்ரைனியர்களை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும்படியும், தான் சரணநடைந்து விட்டதாகவும் பரவும் தகவல் போலியானது என தெரிவித்தார்.

மேலும் தனது நாடு ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு அடிபணியாது என்று வலியுறுத்தினார்.

“சமீபத்தில், எங்கள் இராணுவத்தை ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வெளியேறும்படி நான் கட்டளையிட்டதாக போலியான தகவல் பரப்பப்பட்டது. இது உண்மைக்குப் புறம்பானது. நான் இங்கே இருக்கிறேன், நாங்கள் ஆயுதங்களை கீழே போடவில்லை, எங்கள் நாட்டை பாதுகாப்போம். இது எங்கள் நிலம், எங்கள் நாடு, எங்கள் குழந்தைகள், நாங்கள் அவர்களைப் பாதுகாப்போம்” என்றார்..


உக்ரைன் இராணுவ உள்கட்டமைப்பை ரஷ்யா க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் குறிவைக்கிறது

ரஷ்ய இராணுவம் உக்ரைனின் இராணுவ உள்கட்டமைப்பை விமானம் மற்றும் கடல் சார்ந்த ஏவுகணைகள் மூலம் குறிவைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இரவில், ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகள் உக்ரைனின் இராணுவ உள்கட்டமைப்பிற்கு எதிராக வான் மற்றும் கடலில் ,இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தி நீண்ட தூர துல்லியமான தாக்குதல்களை தொடங்கின” என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தொலைக்காட்சி கருத்துக்களில் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஜபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள உக்ரைனின் மெலிடோபோல் நகரத்தை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதாகவும் அமைச்சகம் கூறியது.


3,500 ரஷ்யப் படைகளை கொன்றுவிட்டோம்: உக்ரைன்!

தலைநகர் கீவ் இல் எரிசக்தி உற்பத்தி நிறுவனமான கிவெனெர்கோவின் களஞ்சியம் தீப்பிடித்து எரிந்தது. காலை 6:24 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது, அடுத்த ஒரு மணி நேரத்தில் தீ பரவியது. உயிர்சேதம் இல்லை.

தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யப் படைகளின் முயற்சியை நேற்று இரவு முறியடித்து விட்டதாக உக்ரைன் இராணுவத்தின் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு ரஷ்ய பராசூட் படையினர் வாசில்கிவின் வயல்களிலும் காடுகளிலும் கிராமங்களிலும் இறங்கியதாகவும், அவர்களை விரட்டியடித்து விட்டதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

“டிசம்பிரிஸ்ட் தெருவில் மோசமான சண்டைகள் நடந்தன. அவர்கள் தங்கள் துருப்புக்களை நிலைநிறுத்த எங்கள் விமானநிலையத்தை கைப்பற்ற வேண்டும் என்று கனவு கண்டார்கள், ஆனால் எங்கள் 40 வது படைப்பிரிவு சக்திவாய்ந்தது. தாக்குதலை முறியடித்தது” என மேயர் பாலசினோவிச் கூறினார்.

நேற்று இரவு வரையான சண்டையில் 3,500 ரஷ்ய படைகளை கொன்றதாகவும், 200 பேரை உயிருடன் பிடித்ததாகவும் உக்ரைன் அறிவித்தது.

நேற்று இரவு கீவ்விற்கு அண்மையில் ரஷ்யாவின் இரண்டு போக்குவரத்து விமானங்களை சுட்டு விழுத்தியதாகவும், அதில் பராசூட் படையணியினர் இருந்திருக்கலாமென்றும் உக்ரைன் தெரிவித்தது.


மேலும் 2 கப்பல்கள் தாக்கப்பட்டன

உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திற்கு அருகே இரண்டு வணிகக் கப்பல்கள் ரஷ்ய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது

கருங்கடலில் உள்ள ஒடெசா துறைமுகத்திற்கு அருகே தானியங்களை ஏற்றிச் சென்ற மால்டோ நாட்டின் கொடியிடப்பட்ட இரசாயனக் கப்பல் மற்றும் பனாமா நாட்டுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் மீது ரஷ்ய போர்க்கப்பல்கள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் கூறியுள்ளது.

படையெடுப்பு தொடங்கியதில் இருந்து மொத்தம் மூன்று இராணுவம் அல்லாத கப்பல்கள் இப்போது தாக்கப்பட்டுள்ளன. வியாழன் அன்று, துருக்கிக்குச் சொந்தமான யாசா ஜூபிடர் சரக்குக் கப்பல் ஒடெசா துறைமுகத்திற்கு அருகில் தாக்கப்பட்டது.

இதில் துருக்கி, ருமேனியா நேட்டோ அங்கத்துவ நாடுகள். எனினும், துருக்கி மோதலில் ஈடுபடும் ரஷ்யா, உக்ரைன் இரண்டினதும் நெருங்கிய நட்பு நாடு.


பெற்றோல் குண்டு தயாரித்து தாக்குங்கள்: உக்ரைன்

உக்ரைன் தலைநகருக்குள் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன. யுத்தம் இப்பொழுது உக்ரைன் தலைநகரில் நடந்து வருகிறது. தலைநகரைப் பாதுகாக்க உதவுமாறு கிவ்வில் உள்ள குடிமக்களிடம் உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, ரஷ்ய மற்றும் உக்ரேனிய அரசாங்கங்கள் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தைகளுக்கு சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தின.

உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தைக்கான நேரம் மற்றும் இடம் குறித்து வரும் மணிநேரங்களில் ஆலோசனை நடத்தும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் செர்ஜி நைகிஃபோரோவ் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்,

ரஷ்யப் படையெடுப்பு தொடங்கிய பின்னர், இராஜதந்திர முறையில் தீர்வைக் காண்பதற்கான முதல் நம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் தன்னை ஒரு நடுநிலை நாடாக அறிவிப்பது குறித்து விவாதிக்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து பெலாரஷ்ய தலைநகர் மின்ஸ்கில் சந்திக்க முன்வந்ததாக ரஷ்யா கூறியது.

ஆனால் போலந்தின் வோர்சாவில் சந்திக்க உக்ரைன் முன்மொழிந்தது.

இது, ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவின் கூற்றுப்படி, தொடர்புகளில் “இடைநிறுத்தம்” ஏற்பட்டது.

“யுக்ரைன் போர்நிறுத்தம் மற்றும் அமைதி பற்றி பேச தயாராக உள்ளது,” என்று நைகிஃபோரோவ் பேஸ்புக்கில் ஒரு பதிவில் கூறினார்.

இரண்டு நாடுகளிற்கிடையிலும் அமைதிப் பேச்சு ஆர்வம் வெளிப்பட்டாலும், அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், ரஷ்யாவின் சலுகை “துப்பாக்கிக் குழலில்” இராஜதந்திரத்தை நடத்துவதற்கான முயற்சி என்றும், பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இருந்தால், ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இராணுவம் உக்ரைன் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை, இராஜதந்திர வெளிப்பாடுகளிற்கு சமநேரத்தில், உக்ரேனிய தலைவர்களுக்கு எதிரான புடினின் கடுமையான சொற்களுடன் கூடிய தகவலும் வெளியாகியது.

நேற்று உரையாற்றிய புடின், உக்ரைன் நாட்டின் இராணுவத்தின் சதிப்புரட்சிக்கான அழைப்பை விடுத்தார்.

“உக்ரைனின் ஆயுதப் படைகளின் இராணுவ வீரர்களிடம் நான் மீண்டும் ஒரு முறை வேண்டுகோள் விடுக்கிறேன்: நவ நாஜிக்கள் (உக்ரேனிய தீவிர தேசியவாதிகள்) உங்கள் குழந்தைகள், மனைவிகள் மற்றும் பெரியவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்” என்று புடின் கூறினார்.

“அதிகாரத்தை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள்.”

கிழக்கு உக்ரேனில் ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்று குற்றம் சாட்டி, உக்ரைனின் தலைமையை “மறுக்க” வேண்டியதன் அவசியத்தை, படையெடுப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக புடின் மேற்கோள் காட்டியுள்ளார்.

இதேவேளை, படையெடுப்பாளர்களை விரட்ட பெட்ரோல் குண்டுகளை தயாரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகத்தால் தலைகர் கீவ் குடியிருப்பாளர்களுக்கு கூறப்பட்டது.

கடுமையான இரவு

ரஷ்யா ஒரே இரவில் கீவ்வில் சூறாவளி தாக்குதல் செய்து கைப்பற்ற முயற்சிக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறினார்.

“நான் முற்றிலும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இந்த இரவு பகலை விட கடினமாக இருக்கும். எங்கள் நாட்டின் பல நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன, ”என்று ஜெலென்ஸ்கி வீடியோ உரையில் கூறினார்.

“கெய்வ் மீது சிறப்பு கவனம் – நாங்கள் தலைநகரை இழக்க முடியாது,” என்று அவர் வெளியிட்ட கிளிப்பில் மேலும் கூறினார்.

வெள்ளிக்கிழமை மாலை நேரில் பார்த்தவர்கள் நகரின் மேற்குப் பகுதியில் இருந்து பீரங்கி குண்டுகள் மற்றும் கடுமையான துப்பாக்கிச் சூடுகளை கேட்டதாக தெரிவித்தனர்.

ஜெலென்ஸ்கி, உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்து, தலைநகரின் தெருக்களில் உதவியாளர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.

இதேவேளை, ரஷ்ய இராணுவத்தின் உளவுப் பிரிவான ஜி.ஆர்.யு.வின் கட்டுப்பாட்டின் கீழ் ஸ்பியட்நாஸ் என்ற கெமாமாண்டோ படை உக்ரைன் இராணுவ வீரர்களின் உடையில் பதுங்கி கொரில்லா முறையில் தலைநகரில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் உக்ரைன் பாதுகாப்பு தரப்பு குழப்பமடைந்துள்ளது. யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரே, இந்த இரகசிய படையணி உக்ரைனிற்குள் ஊடுருவி விட்டதாக கருதப்படுகிறது.

முன்னதாக, புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மீது அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் கனடாவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நகர்வுகளை மேற்கொண்டு தடைகளை விதித்தது. இருப்பினும், இந்த தடைகள் எதுவும் ரஷ்யாவைத் தடுக்கவில்லை.
கீவ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷ்யா, தலைநகரின் வடமேற்கே உள்ள ஹோஸ்டோமல் விமானநிலையத்தை கைப்பற்றியதாகக் கூறியது. இதை உறுதிப்படுத்த முடியவில்லை மற்றும் உக்ரைன் அதிகாரிகள் அங்கு கடும் சண்டை நடந்ததாக தெரிவித்தனர்.
கீவ்வின் மேயர், முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் விட்டலி கிளிட்ச்கோ, ரஷ்ய நாசகாரர்கள் ஏற்கனவே நகருக்குள் நுழைந்ததாகக் கூறினார். “எதிரி தலைநகரை மண்டியிட்டு நம்மை அழிக்க நினைக்கிறான். ‘எங்கள் பாதுகாவலர்களுக்கு மகிமை’
பாதுகாப்பு சபையில் வீட்டோவை பாவித்த ரஷ்யா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்கும் வரைவு ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்துள்ளது. அதே நேரத்தில் சீனா வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தது – இந்த நடவடிக்கை ரஷ்யாவை சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தும் தமது முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவும் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட உரை மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகின. மீதமுள்ள 11 பேரவை உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த வரைபு, 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச் சபைக்கு விரைவில் வாக்கெடுப்பிற்கு விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் இரண்டாவது நகரமான கார்கிவ் விமான நிலையத்திற்கு அருகே வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக சாட்சிகள் தெரிவித்தனர். வடகிழக்கு நகரமான கொனோடோப் அருகே ரஷ்ய துருப்புக்கள் பெரும் இழப்புகளுடன் நிறுத்தப்பட்டதாக உக்ரைனின் இராணுவம் தெரிவித்துள்ளது. செர்னிஹிவ் நகரை கைப்பற்றத் தவறியதைத் தொடர்ந்து, ரஷ்ய கவசப் படைகள் தலைநகரை நோக்கி முன்னேறுவதற்கான புதிய பாதையைத் திறந்துள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுவரை 1000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கையை ரஷ்யா வெளியிடவில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தனது உக்ரேனியப் பிரதிநிதியிடம் பேசினார் மற்றும் கியேவைச் சுற்றியுள்ள தாக்குதல்களில் உக்ரேனிய குழந்தைகள் உட்பட பொதுமக்கள் இறந்ததைக் கண்டித்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் போராடும் வயதுடைய ஆண்களை வெளியேற தடை விதித்துள்ளது. போலந்து, ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளிற்குள் நுழையும் உக்ரைனியர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதை பத்திரிகையாளர்கள் உறுதி செய்தனர்.

பெண்கள் ஆண் துணைகளிடம் விடைபெறும்போது அழுத காட்சிகள் வெளியாகியுள்ளன.

புடின் மீதான தடை

இந்நிலையில், விளாடிமிர் புதின் மற்றும் அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரின் ஐரோப்பா சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய தடைகள் மேற்குலகின் “முழுமையான இயலாமையை” பிரதிபலிப்பதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியதாக RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது சரமாரியான பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன, அதன் வங்கிகளை கருப்பு பட்டியலில் சேர்த்தது மற்றும் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு தடை விதித்தது. ஆனால் அவர்கள் இதுவரை சர்வதேச வங்கிக் கொடுப்பனவுகளுக்கான SWIFT அமைப்பிலிருந்து அதை வெளியேற்றுவதை நிறுத்திவிட்டனர். உக்ரைன் இதனை விமர்சனம் செய்துள்ளது.

ஐரோப்பிய கால்பந்தாட்டத்தின் ஆளும் குழு மே சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து பாரிஸுக்கு மாற்றியது, மேலும் ஃபார்முலா ஒன் இந்த ஆண்டு ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸை ரத்து செய்தது. 2022 ஆம் ஆண்டிற்கான யூரோவிஷன் பாடல் போட்டியில் இருந்து ரஷ்யாவை ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியம் நிறுத்தியது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: Russia-Ukraine crisis: 3ஆம் நாள்: உக்ரைனில் செச்செனிய போராளிகளும் களமிறக்கம்!
Russia-Ukraine crisis: 3ஆம் நாள்: உக்ரைனில் செச்செனிய போராளிகளும் களமிறக்கம்!
https://pagetamil.com/wp-content/uploads/2022/02/Untitl44-300x200.png
Yarl Express
https://www.yarlexpress.com/2022/02/russia-ukraine-crisis-3.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/02/russia-ukraine-crisis-3.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content