நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் அரசாங்கத்திற்கான வழங்கிவரும் ஆதரவை மீளப்பெற்று சுயாதீனமாக செ...
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் அரசாங்கத்திற்கான வழங்கிவரும் ஆதரவை மீளப்பெற்று சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
தமது தீர்மானத்தை எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள அவர்கள், இடைக்கால அரசாங்கத்தை அமைத்து பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அமைச்சுப் பதவிகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர்கள், புதிய அமைச்சரவை நியமனத்திற்கு தமது எதிர்ப்பினையும் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் குழு இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட கலந்துரையாடலொன்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படுவார்களானால் அரசாங்கம் தமது பெரும்பான்மையை இழக்கும் என்பது உறுதி.