அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் பாதிப்படைந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய சிங்கள மக்களுக்கு இனமதபேதமின்றி பண உதவி செய்வதற்காக யாழில்...
அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் பாதிப்படைந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய சிங்கள மக்களுக்கு இனமதபேதமின்றி பண உதவி செய்வதற்காக யாழில் இருந்து தமிழரான கொடைவள்ளல் தியாகி அறக்கொடை நிலைய ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன் நேற்று (11) தனது பயணத்தை இராணுவத்தினரின் உதவியுடன் ஆரம்பித்துள்ளார்.
நாட்டில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய சிங்கள மக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று ஒரு நபருக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுப்பதற்காக கோடிக் கணக்கில் பணத்தை கொண்டு சென்றுள்ளதாக வாமதேவன் தியாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு, விலையேற்றத்தை அடுத்து மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இந்த. நிலையில் நாளாந்தம் தமிழ் மக்களுக்கு உதவி செய்து வரும் இவர் இன்று சிங்கள மக்களுக்கு உதவி செய்வதற்காக புறப்பட்டுள்ளார்.
அரசுக்கு இரு தடவைகள் கொரோனா தொற்று காலப் பகுதியில் இரு கோடி ரூபாய் பணத்தை வழங்கியதோடு, யாழ்.நகரின் மத்தியில் உள்ள ஆரியகுள புனரமைப்புக்கு 3 கோடி ரூபாய் வரை வழங்கியுள்ளார். மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள குளங்கள் புனரமைப்பு தொடக்கம், வீட்டுத்திட்டம், மருத்துவமனை என்று கோடி ரூபாய் கணக்கில் பணத்தை வழங்கி வருகிறார்.
தன் வாழ் நாளில் தான் உழைக்கும் பணத்தை தன்னிடம் உதவி கேட்டு வரும் மக்களுக்கு வழங்கும் இவர் நாட்டில் இனமதமொழி பாராது உதவி செய்வேன் என்று மேலும் தெரிவித்துள்ளார்.