சுற்றாடல் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து புதிய சட்டத்தை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதுவர...
சுற்றாடல் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து புதிய சட்டத்தை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதுவரை தேசிய பூங்காக்களுக்குள் பதிவு செய்யப்பட்ட சஃபாரி வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனத்தையும் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும், சிவனொளிபாதமலை வனப்பகுதி மற்றும் சிங்கராஜ வனம் போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதற்கு தனியான சட்டங்களை உடனடியாக உருவாக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்நாட்டில் வனப் பரப்பு 35% ஆகக் குறைந்துள்ளதால் வனப் பரப்பை சேதப்படுத்தும் எந்தவொரு திட்டத்திற்கும் இடமளிக்க வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.
யால வில்பத்து மற்றும் ஹோர்டன்தென்ன போன்ற சுற்றுச்சூழலை பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மின்சார வாகனங்களின் சேவையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இதேவேளை, யால வில்பத்து, ஹோர்டன் சமவெளி போன்ற பூங்காக்களில் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள பணிப்புரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.