உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் நேற்று நள்ளிரவு முதல் நத்தார் பண்டிகையைக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். நத்தார் பண்டிகையானது இயேசு கிறித்து...
உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் நேற்று நள்ளிரவு முதல் நத்தார் பண்டிகையைக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
நத்தார் பண்டிகையானது இயேசு கிறித்துவின் பிறப்பைக் கொண்டாடும் வண்ணமாக ஆண்டுதோறும் இன்றைய தினத்தில் கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது.
இருளை நீக்கி மனிதர்களிடையே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழைகளும் ஒடுக்கப்பட்டோருக்கும் விடுதலையைப் பெற்றுக் கொடுத்து விடுதலையின் மகிழ்ச்சியை பறைசாற்றும் ஒரு மகிழ்ச்சியான பண்டிகை இதுவாகும்.
இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார நெருக்கடி நிலையில் ஒருவரையொருவர் இரக்கத்துடனும் அன்புடனும் வாழ்த்தி, சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதே நாம் இயேசு கிறிஸ்துவுக்குச் செய்யும் கௌரவமாகும்.
'செலவுகளைக் குறைப்போம், எளிமையாக நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவோம், துன்பப்படுபவர்களுக்கு நம்மிடம் எஞ்சியிருப்பதைக் கொடுப்போம்' என்று பாப்பரசர் போப் பிரான்சிஸ், மனிதநேயத்தின் மதிப்பைக் கற்பிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மாளிகை வீட்டுக்கும் ஏழைக் குடிசைக்கும் ஒரே விதமான நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.
அனைவருக்கும் அன்பைப் பரப்பும் மற்றும் மனிதநேயத்தைப் பகிர்ந்து கொள்ளும் மக்களாக இந்த பண்டிகைக் காலத்தில் அனைவரும் தங்கள் சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உறுதியளிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலகை யதார்த்தபூர்வமாக நோக்குவதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருகின்ற நத்தார் பண்டிகையை, அன்பையும், மனித மாண்பையும், மனிதநேயத்தையும் மதிக்கும் ஒரு சமுதாயத்திற்கான புதியதோர் அடித்தளமாக ஆக்கிக்கொள்வோம் என பிரதமர் தினேஸ் குணவர்தன தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்து விடுவித்து, சிறந்ததோர் சமுதாயத்தை உருவாக்க தன்னை அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் அடிப்படையிலான உண்மையான காலத்தின் தேவையாகும்.
வெறுப்பையும் குரோதத்தையும் ஒழித்து, மோதல்கள் தீர்க்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் உணவுப் பயிர்கள் செழித்து விளங்கும் சுபீட்சமானதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இந்த நத்தார் தினத்தை மற்றுமொரு ஆரம்பமாக மாற்றிக் கொள்ள முடியும்.
அமைதி, சமாதானம், சமத்துவம் போன்ற அற்புதமான போதனைகளின் அடிப்படையில் ஏனையவர்களுக்கு உதவுவதன் மூலம் நத்தார் பண்டிகையை அர்த்தமிக்கதாக கழிப்போம் என பிரதமர் தினேஸ் குணவர்தன தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இயேசு கிறிஸ்து மீட்பார் என நம்பிக்கை கொள்வதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.