இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தவுள்ளதாக வடக்கு மாகாண மீனவசங்க பிரதிநிதிகள் அறிவ...
இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தவுள்ளதாக வடக்கு மாகாண மீனவசங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண மீனவர் சார் பிரச்சினைகள் குறித்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகளுடான கலந்துரையாடலொன்று பல்கலைக்கழக விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தலைமையில் யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று(05) நடைபெற்றது.
இதன்போது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடினர்.
மேலும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடாத்தி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளிப்பதற்கும் தீர்மானித்தனர். போராட்டம் நடைபெறவுள்ள திகதி தொடர்பில் மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடி விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதன் போது தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்தன், அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்த போதும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.