முள்ளிவாய்க்கால் முடிவல்ல – இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேச...
முள்ளிவாய்க்கால் முடிவல்ல – இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை வாரத்தில் இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தனது அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இன படுகொலையை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கப்பட்டது.
இங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எம் கே சிவாஜிலிங்கம், இலங்கையின் அரச படைகளினாலும், சிங்களக் காடையர் குழுக்களாலும் இனப் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் பொதுமக்களுக்கு எமது அஞ்சலிகள்.
தமிழ் மக்கள்மீதான இனப்படுகொலை, போர்க் குற்றங்களுக்கான குற்றவாளிகளைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி எமது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வோம்.
தமிழ் இனப் படுகொலைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும். ஈடுசெய் நீதி கிடைக்கவும் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் அரசியல் தீர்வைக் காண சுதந்திரத்திற்கான பொதுசன வாக்கெடுப்பு ஒன்றினை நடாத்த வேண்டும்.
இலங்கையின் வடக்கு – கிழக்குப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்களும், 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் வாழ்ந்துவரும் பரம்பரையினரும் (புலம்பெயர் மக்களும் உடபட) கலந்துகொள்ளும் வகையில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்த முன்வருமாறு சர்வதேச சமூகத்தைக் கோருகின்றோம்.
வலிந்து காணாமல் போகச் செய்யப்பட்ட தமிழ் மக்களுக்குச் சர்வதேச நீதி கிடைக்கச் செய்வோம் – என்றார்.