யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் அமைச்...
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்தநிலையில், இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்கான 20 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயதானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபனுக்கு வழங்கியுள்ளார்.
அதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி உடனடியாக அமைக்கப்படல்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காணப்படும் கட்டில் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்தல் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள காச நோய் சிகிச்சை பிரிவின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு மயிலட்டியில் உள்ள காசநோய் பிரிவை அங்கு இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆளணி நியமனம் செய்தல் உள்ளிட்ட பல சுகாதார வசதிகளை அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இளைஞர்கள் பலர் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ள நிலையில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை புனர்வாழ்வளிப்பதற்காக நிலையம் ஒன்றை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைத்தல்.
படகுகள் பாதுகாப்புக்கான கல்லணைகளை, கரையோரப் பகுதிகளில் அமைக்கப்படல் வேண்டும்.
வலைகள், படகுகள் சேதமாக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படல் வேண்டும்.
அத்துடன், வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட விவசாய அழிவுகளுக்கு இழப்பீடு வழங்கப்படல் வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் சொந்தக் காணிகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட வேண்டும், குறித்த வீட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி போதுமானது அல்ல என்பதுடன், அதனை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.
குறித்த கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு செயலாளரான மாவட்ட அரசாங்க அதிபருக்கு விடயதானங்களை அனுப்பியுள்ளார்.