ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கிய முக்கிய வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை 2025 ஆம் ஆண்டு நவம்...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கிய முக்கிய வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றியுள்ளதாக 'அநுர மீட்டர்' விஞ்ஞாபன கண்காணிப்பு தளத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 30 பிரதான வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 10 வாக்குறுதிகள் (உதாரணமாக: PAYE வரி திருத்தம் மற்றும் அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு) நிறைவேற்றப்பட்டுள்ளன.
அத்துடன், 10 வாக்குறுதிகள் முன்னேற்ற நிலையிலும், 9 வாக்குறுதிகள் முன்னேற்றம் இல்லாதவையாகவும் காணப்படுகின்றன.
அதேநேரம், இவற்றில் ஒரு வாக்குறுதி தோல்வியடைந்துள்ளதாக அநுர மீட்டர் கண்காணிப்பு தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டில் ஜனாதிபதியின் 2024 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனினும், அண்மையில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளியின் தாக்கத்திற்கு முன்னரே இந்த மீளாய்வு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார சீர்திருத்தம், ஊழல் எதிர்ப்பு, காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு, ஆட்சிமுறை மற்றும் சமூக பாதுகாப்பு போன்ற பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டும் துறைகளே இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அநுர மீட்டர் (Anura Meter) என்றால் என்ன?
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை வெளிப்படைத்தன்மையுடன் கண்காணிப்பதற்காக 'Manthri.lk' தளத்தினால் முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சியாகும். இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன (Maithri Meter) மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ (Gota Meter) ஆகியோரின் வாக்குறுதிகளும் இதேபோல் கண்காணிக்கப்பட்டன.
இலங்கையின் மிகப்பெரிய சுயாதீன சிந்தனைக் குழாமான 'Verité Research' நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இந்தத் தளம், பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி மேலதிக கண்காணிப்புகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


