மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் 09 ஆம் தி...
மத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த வாரம் முதல் சுகாதாரத் தரப்பு சகல மத ஸ்தலங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் மத வழிபாடுகளில் ஈடுபட கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல்களில் தொழுகைகளில் ஈடுபட இதனூடாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான விசேட சுற்றுநிருபம் இன்று (02) வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய ஒரே தடவையில் 30 பேருக்கு தொழுகையில் ஈடுபட இடமளிக்கப்பட இருப்பதோடு ளுஹர் (நண்பகல் தொழுகை) தொழுகை முதல் இஷா தொழுகை வரை பள்ளிவாசல்கள் திறந்திருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.சுபஹ் (அதிகாலை தொழுகை)யின் போது ஒருமணி நேரம் பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான சுற்று நிருபம் சகல பள்ளிவாசல்களுக்கும் இன்று முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாடு முழுவதுமுள்ள சகல பள்ளிவாசல்களையும் திறக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றையடுத்து கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கோயில்கள், பள்ளிவாசல்கள், ஆலயங்கள் மற்றும் விஹாரைகளில் எந்தவித மத வழிபாடுகளும் இடம்பெறவில்லை.
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மத அனுஷ்டானங்களில் ஈடுபட அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையிலே எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் மத வழிபாடுகளை மேற்கொள்ள சுகாதார சேவைப்பணிப்பாளர் அனுமதி வழங்கியிருந்தார்.