அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் எவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாத...
அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் எவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு தனது அரசாங்கம் நியமித்துள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் எவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்காகவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு அரச நிறுவனத்தினதும் தலைவருக்கு, பணிப்பாளர் சபை உறுப்பினருக்கு அல்லது வேறு அதிகாரி ஒருவருக்கு ஏதேனும் ஒரு கட்சிக்காக அரசியலில் ஈடுபடவேண்டிய தேவையிருந்தால் சட்ட ரீதியாக தனது பதவியிலிருந்து விலகி அதனை செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவன தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்திற்காக அரசியல் செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் செய்ய வேண்டியது தமது பொறுப்பில் உள்ள நிறுவனங்களை வினைத்திறனாகவும், ஊழல் மோசடிகள் இன்றியும், பயனுறுதியும் ஒழுக்கக் கட்டுப்பாட்டையும் கொண்ட இலாபமீட்டும் நிறுவனங்களாக முன்னேற்றுவதாகும். அரச நிறுவனங்கள் பொதுமக்கள் பணத்திலேயே இயங்குகின்றன. எனவே அவை எந்த வகையிலும் பொதுமக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது.
அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகள் ஆகிய அரச நிறுவனங்களிடம் உள்ள வாகனங்கள், உபகரணங்கள் போன்ற பௌதீக வளங்கள் அல்லது நிதி வளங்களை எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்காகவோ அல்லது அரசியல் பணிகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவுகளை மீறும் அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
குறுகிய அரசியல் நோக்கங்களில் இருந்து விலகி பலமான ஒரு அரசாங்கத்தையும், முன்னேற்றமான பொருளாதாரத்தையும், நீதி நியாயமான சமூகத்தையும் மக்கள் நேய அரசியல் கலாசாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளது.