கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் பொது மக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...
கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் பொது மக்கள் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன, பெருந்தோட்டத்துறை ஏற்றுமதி விவசாய அமைச்சர் கலாநிதி ரமேஸ் பத்திரன மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கொரோனா தொற்று இரண்டாவது அலை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன பதிலளித்தார். ஜனாதிபதி இது தொடர்பாக அமைச்சரவைக்கு அறிவித்த மேற்படி விடயம் தொடர்பான கூற்றை தெரிவித்த அமைச்சர், கொரோனா தொற்று தற்பொழுது சர்வதேச ரீதியில் பல நாடுகளை வெகுவாக அச்சுறுத்தி வருகின்றது.
இதனாலேயே சிலர் அரசியல் இலாபத்திற்காக இரண்டாவது அலை குறித்து மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்வைக்கின்றனர். கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் சுகாதாரப்பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் முன்னெடுத்த வெற்றிகரமான நடவடிக்கையினால் இந்த தொற்று நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
உலகில் பலமிக்க நாடுகள் இந்த நோயினால் பெரிதும் சிரமப்படுகின்றன. அயல் நாடான இந்தியாவில் 23,700 பேரும், பாகிஸ்தனில் 5,023 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த நாடுகளுக்கு மேலாக சிங்கப்பூரிலும் கூட இன்று இந்த நோயினால் 26 பேர் உயிரிழந்துள்ளர். ஆனால் எமது நாட்டில் இந்த நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.