முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக்கிராமங்களான, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற எமது தமிழ் மக்க...
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக்கிராமங்களான, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற எமது தமிழ் மக்கள், தமது காணிகளை மீட்டெடுப்பதற்காகவும், தமது காணிகளைத் தக்கவைப்பதற்காகவும் எல்லையில் நின்று போராடிக்கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில் இங்குள்ள ஆறு கிராம அலுவலர் பிரிவுகளிலும் வாழ்கின்ற எமது தமிழ் மக்கள் அனைவரும் ஓர் உன்னதமான வீரர்களாவர்.இவ்வாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டமொன்றில் கலந்துகொண்டுகருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
1970 மாசி 28ஆம் திகதியன்று காமினி திஸாநாயக்க மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினை உருவாக்கினார்.
அதே ஆண்டு பங்குனி மாதம் 21ஆம் திகதி மகாவலி சட்டம் நிறவேற்றப்பட்டது.
கடந்த 1988.04.15ஆம் திகதியன்று மகாவலியின் முதலாவது வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. 2007ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது வர்த்தமானியும் வெளியிடப்பட்டிருந்தது.
இவ்வாறாக கடந்த 1970ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்பட்ட பின்னர், இங்குள்ள கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் ஆறு கிராம அலுவலர் பிரிவுகளிலும் வாழும் தமிழ் மக்கள் தமது காணிகளைத் தக்கவைப்பதில் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் வழ்கின்ற மக்கள், இந்த காணிவிடயங்களில் காணப்படுகின்ற நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியாது என்ற நிலையில், தமது பகுதிகளில் இருந்து வெளியேறியிருந்தால் தற்போது நாயாறுதான் தமிழ் மக்களின் எல்லைக்கிராமமாக இருந்திருக்கும்.
இந்த பகுதிகளில் வாழ்கின்ற எமது தமிழ் மக்கள், தமது காணிகளை மீட்டெடுப்பதற்காகவும், தமது காணிகளைத் தக்கவைப்பதற்காகவும் எல்லையில் நின்று போராடிக்கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில் இங்குள்ள ஆறு கிராம அலுவலர் பிரிவுகளிலும் வாழ்கின்ற எமது தமிழ் மக்கள் அனைவரும் ஓர் உன்னதமான வீரர்களாவர்.
கடந்த 1827ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது குடித்தொகைக் கணக்கெடுப்பின்படி, கிழக்கில், மட்டக்களப்பில் 99.62 வீதமான தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 98.44வீதமான மக்கள் வாழ்ந்துள்ளனர். அப்போது அம்பாறை மாவட்டம் இருந்திருக்கவில்லை.
கடந்த 1961ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அவ்வாறு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், 1963ஆம் ஆண்டு குடித் தொகைக் கணக்கெடுப்பில் மட்டக்களப்பில் 96வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர். அம்பாறையில் 80வீதம் தமிழ் மக்களாகவும், மிகுதி 20வீதம் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். திருகோணமலையில் 79வீதம் தமிழ் மக்கள் வாழ்ந்தனர்.
இதே போன்ற ஒரு நிலையே தற்போது மகாவலி எல் வலயம் என்பதை எமது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கொண்டுவந்து, வெலி ஓயா என்று ஒரு பிரதேசசெயலாளர் பிரிவை உருவாக்கி அங்கு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டில் வெலி ஓயா பகுதியில் 6904 சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வாழ்ந்து வந்துள்ளனர்.
பின்னர் 2018ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களின் படி வெலி ஓயாவில் 11,186 சிங்களவர்கள் வாழ்வதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறு குடியேற்றப்பட்டவர்களில் 3,363பேருக்கு தற்போது வாக்குரிமை உள்ளது.
இதனால் தனித் தமிழ் சபையாக இருந்த கரைதுறைப்பற்று பிரதேசசபையில், தற்போது, 24சபை உறுப்பினர்களில் நால்வர் சிங்கள உறுப்பினர்களாக உள்ள நிலையும் காணப்படுகின்றது.
இதனைவிட முல்லைத்தீவு மாவட்டத்தில்கொக்குளாய் முகத்துவாரம் பகுதியிலும் சிங்கள மக்கள் குடியேறியுள்ளனர்.
வன்னி என்று எடுத்துக்கொண்டால் வவுனியாவில் 23,000சிங்கள வாக்குகள் உள்ளன. அங்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலி ஓயா பகுதிபோன்று, வவுனியா மவட்டத்திலும் நாமல்கம, சிராந்திகம என பல்வேறு சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
எனவே இம்முறை வன்னியில் இருந்து, ஒரு சிங்கள பிரதிநிதி பாராளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
குறிப்பாக வன்னியில் 70வீதமானவர்கள் தமிழர்கள் வாழ்கின்றனர். 20வீதமானவர்கள் முஸ்லீம்கள், 10வீதமானவர்கள் சிங்களவர்களாவர்.
எங்களுடைய தமிழ் மக்கள் வன்னியில் 70வீதமாக இருந்துகொண்டு, சிதறி நிற்கின்றோம்.
முஸ்லிம் மக்களோ, அல்லது சிங்கள மக்களோ எமது தமிழ் கட்சிகளுக்கு ஒருபோதும் வாக்களிக்கப்போவதில்லை. ஆனால் எமது தமிழ் மக்களிடம் வந்து வாக்குகளைப் பெற்று, தமிழர்களின் வாக்குப் பலத்தினை சிதறடிக்கும் வேலையினைச் செய்துவருகின்றனர்.
இதனைவிட எமது தமிழர்கள் சிலர் தேசியக் கட்சிகளின் பங்காளிகளாகவும், சுயேற்சைக்குழுக்களாகவும் எமது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க களமிறங்கியுள்ளனர்.
மேலும் சிலர் தமிழ்தேசியக்கூட்டமைப்பினை குறைகூறிக்கொண்டு, எமது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு முனைகின்றனர். அவ்வாறானவர்களில் பலர் கடந்த காலங்களில் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்தவர்களாக இருக்கின்றனர்.
தமழ்த்தேசியக்கூட்டமைப்பில் தவறானவர்கள் இருப்பின், அவர்ளை தமிழ் மக்கள் தமது வாக்களிப்பின் மூலம் அப்புறப் படுத்துங்கள். அவ்வாறானவர்களுக்கு வாக்களிப்பதைத் தவிருங்கள். ஆனால் தமிழ்தேசியக்கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும். அதிலிருந்து தமிழ் மக்களாகிய நாம் தவறுவோமேயானால், எமது தலையில் நாமே மண் தூவுகின்ற செயற்பாடாகவே முடியும் என்றார்.