காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ் தேர்தல் மா...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் பவதாரணி ராஜசிங்கம் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நடந்து முடிந்த யுத்ததால் 87 ஆயிரம் குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த புள்ளிவிபரங்கள் சரியானதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
கறிப்பாக பல காரணங்களுக்காக கணவனால் கைவிடப்பட்டுள்ள அதிகளவாக குடும்பங்கள் இன்று தமது அன்றாட வாழ்வினை கொண்டுநடத்தமுடியாத நிலையில் அவதியுறுகின்றார்கள்.
இவ்வாறான குடும்பங்கள் சமூகத்தில் நிமிர்ந்து வாழ்வதற்கான வழிகளை நாங்கள் செய்து கொடுக்க வேண்டும்.
கிளிநொச்சி மாவட்டம் குறிப்பாக வன்னி பெரு நிலப்பரப்பில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் சொல்லித் தீர்க்க முடியாதவையாக உள்ளன.
இவர்களுக்கான மீளெழுச்சியே எனது பிரதான பேசு பொருளாக உள்ளது. இது பிரதான பேசு பொருளாக மட்டும் நின்றுவிடப் போவதில்லை.
நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லும் அதிகாரத்தை மக்கள் தந்தாலும், தராவிட்டாலும் பெண்களின் மீளெழுச்சிக்கான எனது சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
தேர்தலில் களமிறங்கும் பெண்கள் பெரும்பாலும் அழகுசாதாண பொருட்களாகவும் அல்லது அனுதாப அலைகளை ஏற்படுத்துவதற்குமாகவே வரவைளக்கப்படுகின்றார்கள்.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் என்னை உள்ளீர்த்ததற்கு காரணம் இதுவல்ல. துணிவோடு எமது சமூகத்திற்கு தேவையானவற்றை செய்வதற்காகவே.
அரசியலில் உள்ள பெண்களை ஆளுமையுடன் பாருங்கள். அனுதாபமாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒவ்வொரு பெண்ணும் தனது தன்மானத்துடன் துணிவுடனே வாழ விரும்புவார்கள். அவர்களை கண்ணீருடன் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்.
வேறு கட்சிகளில் போட்டியிடும் பெண்கள் அனுதாபத்தையும், கண்ணீரையும் காட்டி மக்களின் முன் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக மட்டும் நிறுத்தப்படுகின்றார்கள்.
மேலும் எமது சமூகத்தில் உள்ள முன்னாள் பெண் போராளிகளும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறிவினர்களும் மிக மோசமான பாதிப்புக்களை எதிர் கொள்ளுகின்றார்கள்.
ஆனால் நான் அவர்களை பற்றி பெரிதும் பேசுவதில்லை என்ற கருத்து ஒன்று உள்ளது.
அவர்களை தேர்தலுக்கான பேசு பொருளாக நாம் பார்க்கவில்லை. அவர்களுக்கு நீதி வேண்டும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
அவர்கள் தொடர்பான பேச வேண்டியது தேர்தலில் இல்லை. அது தொடர்பில் பேச வேண்டிய இடங்கள் உள்ளன. அவந்த இடங்களில், அதற்கேற்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கான நான் நிச்சயமாக உரத்த குரல் கொடுப்பேன்.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் 20 இலட்சம் ரூபா இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும் என்றார்.