யாழ் எக்ஸ்பிரஸ், நல்லூர், சப்பரம், ரதோற்ஸவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இன்று 23ஆம் திருவிழா பெருமளவு பக்த அடியார்கள் புடைசூழ நடைபெற்றது.
சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்று மாலை வள்ளி, தெய்வானை சமேதராய் வேலவன் இடப வாகனத்தில் வெளிவீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்.
நல்லூர் ஆலய பெருந் திருவிழா கடந்த ஜூலை 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் இன்று 23ஆம் திருவிழாவான சப்பைரதத் விழாவில் கொரோனா நெருக்கடியை கருத்திற்கொண்டு சப்பைரதம் அல்லாமல் சுவாமி வெளிவீதி வலம்வந்தார்.
இதேவேளை, நாளை காலை 6 மணியளவில் இரதோற்சவம் ஆரம்பமாகவுள்ளதுடன் அடியவர்களின் வசதி கருதி சண்முகப் பெருமானை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை தரிசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை தீர்த்த உற்சவமும் மறுநாள் புதன்கிழமை பூங்காவன திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இம்முறை திருவிழா கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெற்றுவரும் நிலையில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருவதுடன் ஆலயத்துக்குவருகைதரும் பக்தர்களின் அடையாள அட்டை பாதுகாப்புத்தரப்பினரால் பதியப்படுகின்றன.
மேலும், இம்முறை, நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கான, பிரதட்டை மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், காவடி மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு்ம தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் விழாக்களில் அதிகளவு பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்ற நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையான பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.