சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று நடைபெற்றது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழம...
சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று நடைபெற்றது.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் குறித்த நிகழ்வு அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடந்தது.
இந்நிகழ்வில் கொலை செய்யப்பட்ட நிலக்சனின் குடும்பத்தினர், உறவினர்கள், பாடசாலை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மலர் மாலை அணிவித்தும், தீபங்கள் ஏற்றியும், மலர்களை தூவியும் நிலக்சனுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
சகாதேவன் நிலக்சன் கடந்த 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அன்றைய தினம் அதிகாலை வேளை கொக்குவில் ஆடியபாதம் வீதியிலுள்ள அவருடைய வீடு இராணுவ புலனாய்வாளர்களாலும் இராணுவ ஒட்டு குழுக்களினாலும் முற்றுகையிடப்பட்டது.
வீட்டில் இருந்த சகாதேவன் நிலக்சனை விசாரிக்க வேண்டும் என்று கூறிய ஆயுத குழுவினர் வீட்டு வாசலில் அழைத்து விசாரித்தனர். இதன் போது சகாதேவன் நிலக்சனின் தாய் தந்தையர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட போது திடீரென சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.