பனை, கித்துள், ஏற்றுமதி, யாழ் எக்ஸ்பிரஸ், ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்ஷ
இதன்மூலம், நாட்டுக்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவருவதற்கான புதிய மார்க்கத்தை ஏற்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தேங்காய், கித்துள், பனை உற்பத்திகளை ஊக்குவிக்கவும் அதனுடன் தொடர்புடைய தொழில்துறைகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போதே குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கித்துள் மற்றும் பனை உற்பத்திகளை ஊக்குவிக்கவும், அவை தொடர்பில் காணப்படும் தடைகளை நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், கித்துள் உற்பத்திக்காக புதிய அரச நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பனை மரங்களை வெட்டுவதை தடை செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் ஆண்டுக்கு 3 பில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றில் 1.8 பில்லியன் தேங்காய்கள் உள்நாட்டு நுகர்வுக்கு பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
ஆகவே, தேங்காய் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்காக தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட இடங்களில் உடனடியாக தேங்காய் உற்பத்தியை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
மேலும், தேங்காய்க்கு நிர்ணய விலையைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இறப்பர் ஏற்றுமதி மூலம் வருடாந்தம் ஈட்டப்படும் 600 மில்லியன் டொலர் வருமானத்தை, இந்த ஆண்டில் 2 ஆயிரம் மில்லியன் டொலராக உயர்த்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, உள்நாட்டில் இறப்பர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இறப்பர் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.