கண் பார்வை இழப்பு, யாழ் எக்ஸ்பிரஸ்
மீரிகமைவில் 16 வயதுச் சிறுவன் ஒருவன் கண் பார்வையை இழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, மீரிகமை ஆதார வைத்தியசாலையை சேர்ந்த வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி மீரிகமை வைத்தியசாலையிலிருந்து தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்ட பின்னர், குறித்த சிறுவன் பார்வையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த ஏப்ரல் 03ஆம் திகதி மீரிகமை வைத்தியசாலைக்கு நரம்பு சம்பந்தமான சிகிச்சையொன்றுக்காக சென்றிருந்ததாகவும், அவ்வேளையில் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்ததால், அவரது மருந்துகளை குறித்த வைத்தியசாலையானது தபால் மூலமாக அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பரிந்துரைக்கப்பட்ட குறித்த மருந்துகளை உட்கொண்டு 14 நாட்களின் பின்னர் அச்சிறுவன் பார்வையை இழந்துள்ளதாக, பெற்றோர் தெரிவித்தனர்.
மீரிகமை, கல்எலியவிலுள்ள குறித்த சிறுவனின் வீட்டுக்கு விஜயம் செய்த, ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என, ஊடகங்களுக்கு தெரிவித்தார்.