ஆஃப்ரிக்க நாடான சிம்பாப்வேயில் உள்ள ஹவாங்கே தேசியப் பூங்காவில் 12 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. இந்த மரணங்கள் குறித்து வனவிலங்கு ...
ஆஃப்ரிக்க நாடான சிம்பாப்வேயில் உள்ள ஹவாங்கே தேசியப் பூங்காவில் 12 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.
இந்த மரணங்கள் குறித்து வனவிலங்கு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 12 யானைகளின் உடல்களிலும் தந்தம் துண்டிக்கப்படாமல் இருந்தது.
வேட்டையாடப்படும் யானைகளை துப்பாக்கியால் சுடுவதற்கு பதிலாக சயனைட் பயன்படுத்தி விஷம் வைத்துக் கொல்லப்படுவதும் நிகழ்ந்து வருகிறது.
ஆனால், வேறு எந்த காட்டு உயிரினங்களும் உயிரிழக்காததால், சயனைட் வைத்து யானைகள் கொல்லப்படுவதாக தாங்கள் கருதவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த யானைகளின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக அவற்றின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஹவாங்கே தேசியப் பூங்கா போட்ஸ்வானா உடனான எல்லையில் அமைந்துள்ளது.
அண்மையில், போட்ஸ்வானாவில் உள்ள ஒகவாங்கோ டெல்டா பகுதியில் 350க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.