தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றினையவேண்டும். இனியும் வீடு, மீன், சைக்கிள் எனப் பிரிந்து நிற்காது ஓரணியில் திரள்வது காலத்தி...
தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றினையவேண்டும். இனியும் வீடு, மீன், சைக்கிள் எனப் பிரிந்து நிற்காது ஓரணியில் திரள்வது காலத்தின் கட்டாயம் எனத் தெரிவித்துள்ள ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் ஒன்றிணையாவிட்டால் தந்தை செல்வா சொன்னது போன்ற நிலைமையே ஏற்படுமென்றும் எச்சிரித்துள்ளார்.
ரெலோஅமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பு மற்றும் கௌரவிப்பு யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதேஅவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.
அங்குஅவர் மேலும் தெரிவித்ததாவது
தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத அலையொன்று தென்னிலங்கையில் கிளப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழர்களை வந்தேறுகுடிகள் என்றும் வாடகைவீட்டுக்காரர்கள் என்றும் இனவாதரீதியானகருத்துக்களைதெரிவித்துவருகின்றனர்.
அதிலும் தமிழர்களின் மண்ணையும் மொழியையும் பேசியவர்கள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் எனவும் கூறுவதனூடாக அவ்வாறுயாரும் கூறினால் உங்களுக்கும் அதுவே நடக்குமே என்கிற பாணியில் எச்சரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறு தென்னிலங்கையில் மிகப் பெரியளவில் இனவாதரீதியான பிரச்சாரங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நீதியரசரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழர்கள் பூர்வீகக் குடிகள் என்று சொன்ன கருத்திற்கு எதிராகவே தற்போது இந்த இனவாதப் பிரச்சாரங்களை அவர்கள் போட்டிபோட்டு முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக அரசின் பிரதமர் உள்ளிட்ட ஆளுங்கட்சி மாத்திரமல்லாமல் எதிர்க் கட்சியும் இணைந்துதான் இதற்கு எதிரான இனவாத பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.
இந்த இடத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழர்கள் பூர்வீகக் குடிகள் என்றவுடன் தென்னிலங்கை சிங்களதரப்புக்கள் எல்லாம் ஒன்றிணைந்து அதனை எதிர்க்கின்றனர். ஆனால் தமிழர்கள் இதனைக் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டுமே இருக்கின்றனர்.
சிங்களதேசம் தமிழர்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு ஒற்றுமையாக எதிர்கின்ற நிலையில் தமிழர் தேசத்தில் அந்த ஒற்றுமை இல்லை. தமிழர் தரப்புக்களிடத்தே அந்த ஒற்றுமை என்பது காணல் நீராகவே உள்ளது. ஆக தமிழ் தேசம் எங்கே போகின்றது என்ற கேள்வியெழுகின்றது.
இதனைஒவ்வொருவரும் நன்றாக விளங்கிக் கொள்வதுடன் உணர்ந்து கொள்ள வேண்டியதும் மிகமிக அவசியமானது.
தமிழர்கள் பூர்வீக குடிகள் என்றதற்கு எதிர்ப்பு வந்தாலும் நாம் எமது மண்ணையும் மொழியையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். எமது ஒற்றுமையே தற்போது அவசியமானது. ஏனெனில் எங்களுக்கு எதிராக தெற்கில் அவர்கள் எவ்வாறு ஒன்றுதிரண்டு இருக்கின்றனர் என்பதை தெளிவாகப் பார்க்கவேண்டும்.
ஆகையினால் எங்களுக்குள்ளும் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.
யாழ்ப்பாணத்திற்கு நான் வந்திருந்தபோது ஒரு செய்தியொன்றைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தேன். அதாவது தமிழ்த் தேசியக் கட்சிகளாக இருக்கின்ற வீடு, மீன் சைக்கிள் கட்சிகளின் இளைஞரணியினர் ஒருமித்து ஒரு முடிவொன்றை எடுத்துள்ளனர். தியாகதீபம் தீலீபன் நிகழ்விற்காக ஒன்றாகச் சேர்ந்து செயற்படுவதாக அவர்கள் எடுத்துள்ளஅந்தத் தீர்மானத்தை நான் வரவேற்கிறேன்.
இளைஞர்களின் ஒற்றுமையானஅந்தச் செயற்பாட்டிற்கு நாங்கள் எங்களது முழுமையான ஆதரவை வழங்குவதற்கு தயாராகவே இருக்கிறோம். இளைஞர்கள் ஒற்றுமையாக ஒருமித்துச் செயற்பட முன்வந்துள்ளது போன்று கட்சிகளும் அதற்கு முன்வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
அதனை விடுத்து எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால் எமது வாழ்வு கேள்விக்குறி. ஆகவே எங்கள் மொழி கலை கலாசாரம் மண் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றுட்டு செயற்படவேண்டியது அவசியம். குறிப்பாக எங்களுக்குள் இனியும் வீடு மீன் சைக்கிள் என்ற பாகுபாடு காட்டக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அதனைவிடுத்து உதட்டளவில் தேசியம் பேசுவதில் பயனில்லை.
மேலும் உதட்டளவில் ஒற்றுமையை குறித்துப் பேசுவதையும் நிறுத்தவேண்டும். மனப்பூர்வமாக ஒருமித்துச் செயற்பட வேண்டும். அவ்வாறானதொரு ஒற்றுமைக்காகவே நாங்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பில் இருந்து வருகின்றோம். இந்தக் கூட்டமைப்பை ஆரம்பித்தபோது இருந்த கட்சிகள் எல்லாம் அதிலிருந்த வெளியேறி இருக்கின்றபோதும் நாங்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பிலேயே இருந்து வருகின்றோம். ஆகவே எங்களது கட்சியிலும் சரி கூட்டமைப்பிலும் சரி எம்முடன் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். குறிப்பாக நாடாளுமன்றில் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் நாங்கள் ஒருமித்து செயற்படவேண்டும். தமிழ் மக்களுக்காக ஒன்றிணைந்தகுரல் எழுப்பவேண்டும். இதில் நாடாளுமன்றில் அண்மையில் விக்னேஸ்வரன் ஐயா தெரிவித்த கருத்துக்கு தென்னிலங்கையின் ஆளும் தரப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது கூட அந்த இடத்தில் நாங்கள் தமிழர்களாக குரல் எழுப்பியிருந்தோம்.
அவ்வாறு எங்களுக்கு எதிராக எழுப்பபடுகின்ற இனவாதத்திற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்ற அத்தகைய ஒன்றிணைவு இன்றியமையாதது. அதுவே காலத்தின் கட்டாயமாகவும் இருக்கின்றது. நாங்கள் ஓரணியில் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியம் பேசுகின்ற தமிழ்க் கட்சிகள் அனைவரும் முன் வரவேண்டும்.
இதனைவிடுத்து தேசியம் இனம் மண் என பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படக் கூடாது.எங்கள் தேசத்தை நாங்கள் காப்பாற்ற வேண்டும் என்றால் தமிழ்தரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அது உதட்டளவில் இல்லாமல் மனப்பூர்வமாக அமைய வேண்டும். இன்றைய நிலையில் இந்த ஒற்றுமை ஏற்படாதுவிட்டால் தந்தைசெல்வா சொன்னது போன்று தமிழர்களை கடவுளாளும் காப்பாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.