ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாக...
ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த அழைப்பிற்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள்.
அதற்கமைய யாழ்ப்பாணத்திலும் இன்று முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை என்பதுடன், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
மேலும் பொதுமக்களின் நடமாட்டம் வீதிகளில் குறைவாகவே உள்ளதுடன், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இதேநேரம் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
கிளிநொச்சியிலும் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வர்த்தக நிலையங்கள், சந்தைகள் என்பன பூட்டப்பட்டுள்ளன.மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாற்று இடங்களில் விற்பனை இடம்பெற்று வருகின்றது.
தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை என்பதுடன், அரச திணைக்களங்கள் வழமைபோல் திறந்துள்ளபோதிலும் அதன் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெறவில்லை.
பாடசாலைகளிற்கு மாணவர்கள் வருகை இன்மையால், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளமையால் வழமையான செயற்பாடுகள் இடம்பெறவில்லை.
வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அரச திணைக்களங்கள் மற்றும் உணவகங்கள் என்பன திறக்கப்பட்டுள்ளது.
எனினும் வவுனியாவில் வர்த்தக நிறுவனங்கள் சில திறக்கப்பட்டும் காணப்படுகிறது.
இந்த நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார் வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றிற்கும் சென்று வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்து வருகின்றனர்.
வவுனியா மொத்த மரக்கறி விற்பனை நிலையம் வழமைபோல் காலையில் செயற்பட்டதுடன், பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் தூர இட சேவைகளும் குறைந்த அளவில் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை வவுனியாவில் முற்சக்கரவண்டிகள் சில சேவையில் ஈடுபட்டதுடன், பாடசாலைகளுக்கும் குறைந்தளவான மாணவர்கள் வருகைதந்திருந்தனர்.
அதேபோல முல்லைத்தீவில் அரச நிறுவனங்கள் தவிர்த்து ஏனைய வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களின் வருகை குறைவாகவே உள்ளது. அதேநேரம், போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவுள்ளது.
இதேவேளை, கிழக்கிலும் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் மட்டக்களப்பு தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் வணிக நிலையங்கள், பாடசாலைகள், அரச நிறுவனங்கள் என்பன திறக்கப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் மட்டக்களப்பில் இந்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
அதற்கமைய அங்கு பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களின் வருகை குறைவாகவே உள்ளதுடன் வணிக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.
அதேநேரம், போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவுமுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ. பி.ஆர். எல். எவ், தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பசுமை இயங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்தே இன்றைய கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
இந்தக் கட்சிகளின் அழைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடக்கு, கிழக்கு வணிகர் கழகங்கள், போக்குவரத்துச் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.