சீரற்ற கால நிலையின் காரணமாக வீசிய சூறைக்காற்றில் சிக்கி மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் கட்டியிருந்த றோலர் படகு உடைந்து பலத்த சேதத்திற்கு...
சீரற்ற கால நிலையின் காரணமாக வீசிய சூறைக்காற்றில் சிக்கி மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் கட்டியிருந்த றோலர் படகு உடைந்து பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் வீசிய சூறைக்காற்றினால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சிக்கி மயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் றசியசிங்கம் என்பவருக்கு சொந்தமான 28 அடி நீளமுடைய றோலர் படகே இவ்வாறு பலத்த சேதமாகியுள்ளது.
மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்ற சில மீனவர்கள் இன்று அதிகாலை கரைதிரும்பிய போதே றோலர் கடல் நீரில் மூழ்கிக்கொண்டிருப்பது கண்டறிப்பட்டது. அதன் பின்னர் றோலரில் இருந்த மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்கள் வேறு படகு ஒன்றின் உதவியுடன் இறக்கப்பட்டு நிறைந்திருந்த நீரும் வெளியேற்றப்பட்டு கரைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பலத்த காற்று வீசிவருவதுடன் கடல் பகுதியும் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
இந்நிலையில் மயிலிட்டி துறைமுகத்தில் கட்டப்படிருந்த உள்ளூர் மீனவருக்கு சொந்தமான றோலர் படகே விபத்துக்குள்ளாகி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
மயிலிட்டி துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கல்லணையில் ஏற்பட்டிருக்கும் சேதத்தை சரிசெய்யாமையே துறைமுகப் பகுதிக்குள் அலையின் தாக்கம் வலுவாக உணரப்பட்டமைக்கு காரணம் எனவும், துறைமுக அபிவிருத்தியின் போது குறித்த கல்லணையில் ஏற்பட்ட சேதத்தை முன்னுரிமை அடிப்படையில் சீர்செய்யுமாறு வலியிறுத்திய நிலையில் இதுவரை அது சீர்செய்யப்படவில்லை எனவும் பிரதேச மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சூறைக்காற்றில் சிக்கி உடைந்து பலத்த சேதத்திற்கு உள்ளாகிய றோலர் படகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட உடைப்பினால் கடல் நீர் உட்புகுந்ததால் தாண்டுள்ளது. இவ்வாறு உட்சென்ற கடல் நீர் றோலரின் இயந்திரப்பகுதிக்குள் நிறைந்து நின்றதால் இயந்திரமும் முற்றிலுமாக பயன்படுத்த முடியா நிலையேற்பட்டுள்ளது.
சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் பலத்த சேதமடைந்துள்ள றோலர் படகு சுமார் இருபது இலட்சம் ரூபா பெறுமதியுடையது என்பது குறிப்பிடத்தக்கது.