இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 905 கிலோ மீற்றர் (489 கடல் மைல்) தொலைவில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்...
இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 905 கிலோ மீற்றர் (489 கடல் மைல்) தொலைவில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு புயலாக வலுப்பெற சாத்தியம் உள்ளது என பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இது புயலாக மாறவே வாய்ப்புண்டு. இந்தத் தாழமுக்கம் மிக வேகமாக நகர்ந்து வருகின்றது. இதனால் முன்னர் குறிப்பிட்ட 23, 24,25 ஆம் திகதிகளுக்கு முன்னதாகவே வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இதன் தாக்கம் இருக்கக்கூடும்.
இது புயலாக மாறினால் 'நிவார்' ( Nivar) என்ற பெயரே வழங்கப்படும். இது ஈரான் நாடு இட்ட பெயராகும்.
தற்போது வரை எமக்கு கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சி இதுவரை கிடைக்க வேண்டிய மொத்த மழைவீழ்ச்சியில் 46% மட்டுமே கிடைத்துள்ளது. எனவே எமக்கு ஒரு பெருமழை அவசியம்.
அந்தப் பெருமழை இதுபோன்ற தாழமுக்கம் அல்லது புயலினாலேயே சாத்தியம். ஆகவே இந்தத் தாழமுக்கம் எமக்கு மிக முக்கியமான ஒன்று. ஆனால் தாழமுக்கங்கள் புயல்கள் எப்போதும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
ஆகவே பொறுப்புக்குரிய திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்கள் உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்வதனூடாக பாதகமான விளைவுகளை இழிவாக்கலாம் என்றும் தெரிவித்தார்.