அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழ...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ் மாவட்ட நீதிமன்றில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய வி.மணிவண்ணன் வழக்கை தன் சார்பில் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு டிசெம்பர் 18ஆம் திகதி அழைக்கப்படும் எனத் தவணையிட்ட யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், பிரதிவாதிகளான இருவருக்கும் மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை நீக்கியதற்கு தடை விதித்து உத்தரவிடக் கோரி, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், அவரை உறுப்புரிமையில் நீக்கியதற்கு இடைக்காலத் தடை கட்டளையை வழங்கி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டது.
அதன் காரணமாக யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீடிக்க வழியமைக்கப்பட்டது. எனினும் இந்த உத்தரவை மதிக்காது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தம்மை அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநகர சபை நடவடிக்கைகளில் செயற்பட முடியாது என யாழ் மாநகர சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் என மனுதாரர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
“அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ள வி.மணிவண்ணன் எமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநகர சபையின் நடவடிக்கைகளில் பங்கேற்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே எமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த வி.மணிவண்ணனை அனுமதித்தமை ஏற்றுக்கொள்ள முடியாதது” என கடிதத்தில் பிரதிவாதி குறிப்பிட்டுள்ளார். எதிர்மனுதாரர் இந்தக் கடிதத்தை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு அனுப்பியதன் மூலம் நீதிமன்று 29.10.2020ஆம் திகதி வழங்கிய கட்டாணையை மீறியுள்ளார். அவ்வாறு மீறியதன் மூலம் குற்றவியல் நடவடிக்கையின் 663ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் நீதித்துறை சட்டத்தின் 55(பி) பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய நீதிமன்ற அவமதிப்பு எனும் குற்றத்தினைப் புரிந்துள்ளார். என மணிவண்ணன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டத்தரணியும் இலங்கை நாடாளுமன்றின் உறுப்பினருமாவார்.இந் நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் 2 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதுடன், நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் வறிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.