யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளும் பி.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறு செல்லாது எனவும் கொழும்பு நவலோகாவில் பிசிஆர் பரிசோதனையை மேற்கொ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளும் பி.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறு செல்லாது எனவும் கொழும்பு நவலோகாவில் பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டு வருமாறும் விமான நிலையத்தில் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் நின்றவர்களும் வெளிநாடுகளிற்கு பயணிப்பவர்களும் விமானம் ஏறுவதற்கு முன்பு 72 மணித்தியாலங்களிற்கு உட்பட்ட நேரத்தில் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பித்தே விமானத்தில் பயணிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது.
இந்த நடைமுறைக்கு அமைய வடக்கில் இருந்து பயணிப்பவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலேயே ஆரம்பத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழுடன் சென்ற நேரம் விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டடனர். இருப்பினும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சோதனை மேற்கொண்டு உறுதிப்படுத்தல் சகிதம் செல்பவர்களுக்கு விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்படுகின்றதாக அறியமுடிகிறது.
அவ்வாறு அனுமதி மறுக்கப்படுபவர்களை கொழும்பில் உள்ள நவலோகா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு அந்த சான்றிதழை பெற்று வருமாறு பணிக்கப்படுகின்றனர். இதற்கமைய நவலோகா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் ஒருவருக்கு 9 ஆயிரம் ரூபா பணம் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனால் வெளிநாட்டிற்கு செல்ல முற்படும் பலரும் குழம்பிப் போயுள்ளனர்.உரிய தரப்பினர் இது தொடர்பில் தெளிவூட்ட வேண்டும் எனவும் வெளிநாடு செல்வோர் கூறுகின்றனர்.