தீவக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நன்கறிந்தே தீவகத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன் என பாராளுமன்ற குழுக்களின் பிரத...
தீவக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நன்கறிந்தே தீவகத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை ஊர்காவற்துறை பருத்தியடைப்பு பகுதியில் குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நான் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எதிர்க் கட்சியில் இருந்தபோது பல தடவை தீவகத்திற்கு வந்து சென்றுள்ள நிலையில் தற்போது மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக வந்துள்ளேன்.
தீவக மக்கள் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை காணப்படுகின்ற நிலையில் இங்குள்ள மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை தற்காலிகமாகவேனும் தீர்க்க வேண்டும் என நினைத்ததன் வெளிப்பாடே இன்று நீங்கள் பயனடையும் திட்டம்.
கடந்த நல்லாட்சியில் எதிர்க்கட்சியில் நான் இருந்தபோது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறுநீரக நோய் தடுப்பு பிரிவு செயற்திட்டத்தின் கீழ் 7 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை தீவகத்தில் செயற்படுத்துவதற்கு எடுத்த முயற்சியின் பயனாக இவ்விடத்தில் குறித்த திட்டம் நிறைவேறி உள்ளது.
நான் தீவக மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தொடர்பில் நன்கறிவேன். தீவக மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக திட்டங்களை தீவகம் நோக்கி கொண்டுவரவில்லை தேவைகளை அறிந்தே திட்டங்களை செயற்படுத்தினேன்.
தீவக மக்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள் தேவைகளை தேடி யார் வேண்டுமானாலும் அபிவிருத்திகளை செய்யலாம் இவர்தான் வரவண்டும் அவர் வரக்கூடாது என தடைகள் கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.