முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்களை கடந்த இரவே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த ...
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்களை கடந்த இரவே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட புதுக்குடியிருப்பு பகுதி முடக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
குறித்த தொற்றாளர் தகவல் வழங்கியதன் அப்படையில் அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள், மற்றும் அவர் ஐயப்பன் கோவில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமையால் அந்த வழிபாட்டில் பங்கேற்ற நபர்கள் ஆகியோர் குடும்பங்களுடன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் அந்த நபர், புதுக்குடியிருப்பில் மட்டுமல்லாமல் விசுவமடு வரையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் பெருமளவானோருடன் தொடர்பிலும் இருந்துவந்துள்ளார்.
இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்புகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்விடுத்துவருகிறோம்.
அதேபோல, உடனடியாகவே அவருடன் தொடர்பில் இருந்த மக்கள் அனைவரும் உங்களை நீங்களே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டு சுகாதார உத்தியோகத்தகர்களுக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இதேவேளை புதுக்குடியிருப்பு முடக்கப்படுமா என்ற கேள்வி பதிலளித்த அவர், சந்தை முடக்கப்படுகிறது. அதேவேளை தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களின் வியாபாரிகளும் பணியாளர்களும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனை நாளை முன்னெடுக்கப்படும் என்றாலும் புதுக்குடியிருப்பை முடக்கும் உத்தேசம் இல்லை என்று தெரிவித்தார்.
இதனிடையே தொற்றாளர் தொடர்பில் அவதானிப்பை மேற்கொண்டுவந்த பொதுச்சுகாதார உத்தியோகத்தர் முன்வைத்த பரிந்துரைக்கு அமையவே குறித்த தொற்றாளரை உட்பட 12 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேபோல, மருதனார்மடம் கொத்தணியின் முதலாவது தொற்றாளர் தொடர்பிலும் உடுவில் பொதுச்சுகாதார உத்தியோகத்தர் தொடர்ந்தும் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே அந்தத் தொற்றாளரை இலக்குவைத்து அவரை உள்ளடக்கி எழுமாற்றாக மேற்கொண்ட பரிசோதனையின் அடிப்படையிலேயே மருதனார்மடம் கொத்தணி அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.