1848 ஆம் ஆண்டில் அப்போதைய ஆளுநர் லார்ட் டொரிங்டன் காலத்தில் இருந்த வரிவிதிப்பு போன்றுள்ளது தற்போதைய அரசின் நாப்கின் வரிவிதிப்பு செயற்பாடு ...
1848 ஆம் ஆண்டில் அப்போதைய ஆளுநர் லார்ட் டொரிங்டன் காலத்தில் இருந்த வரிவிதிப்பு போன்றுள்ளது தற்போதைய அரசின் நாப்கின் வரிவிதிப்பு செயற்பாடு என்கிறார்கள் நாடாளுமன்ற எதிர்கட்சியினர். இந்த நாப்கின் அரசியல் நாட்டின் பெரும்பாலான குடும்பங்களாக இருக்கும், ஏழ்மை குடும்ப பெண்களின் வாழ்க்கையில் பெருமளவான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அவர்களின் வாதம். உண்மை தானா?
ஆம்…..
ஒரு பெண்ணின் உடல் இயக்க நிலையில் மாதவிடாய் காலம் என்பது இயற்கை என்பதையே பேச மறுக்கும் சமூகம் நாங்கள். இந்த சிந்தனையில் தமிழ், சிங்களம் என்று வேறுபடுத்த முடியாது.
பெண்களின் பிரச்சினை இன, மதம் கடந்தது. தீட்டு தொடர்பான நம்பிக்கைகள் பெண்கள் சார்ந்து மட்டுமே திணிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு குறிப்பட்ட பருவ வயதில் மாதவிடாய் தொடர்பில் பேசுவதற்கு பெண்களே கூச்சப்படுவார்கள். குறிப்பாக தமிழ் சமூகத்தில் தன் உடலில் இடம்பெறும் இயற்கையான வழக்கமான செயற்பாட்டின் வலியை கூற தயங்குவார்கள். காராணம்-மாதவிடாய் தொடர்பில் கலாச்சார, சமய ரீதியில் காண்பிக்கப்படுகின்ற புனிதம் அல்லது தீட்டு என்று கூட கூறலாம்.
ஒரு பெண்ணினுடைய இயல்பான இயற்கையான உடல் செயற்பாட்டிற்கு தேவையற்ற மெருகூட்டல்களை கொடுத்திருப்பதன் மூலம் இந்த சமூகம் பெண் சார்ந்த உடல் ரீதியான அல்லது உள ரீதியான வலிகளை குறைக்கின்றது என்றால் அதனை ஏற்பதில் தவறில்லை. ஆனால் மாதவிடாயினால் பெண்கள் உடல் சார்ந்த வலியை கடந்து உளரீதியான, சொல்லேலா வலிகளை அனுபவிக்கிறார்கள் என்றால் அதை நகைச்சுவையாக பார்க்கும் சமூகம் இது.
இங்கு வலிகளை பேசவில்லை. ஆதலால் விடயத்திற்குள் வரலாம். சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மாதவிடாய் சார்ந்த பெண்களின் போராட்டம் வேறு மாதிரி இருக்கிறது. அதாவது தொழில் புரியும் இடங்களில் பெண்களுக்கான விடுமுறை காலம் அவர்களது மாதவிடாய் காலத்திலாக இருக்க வேண்டும் என்ற போராட்டங்கள் நடத்தப்பட்டிருப்பதை அறிவோம். இந்த கோரிக்கை பெண்களுக்கான அடிப்படை உரிமை. இதனை கோருவதால் பெண்களை விசேட தேவையுடையோருக்குள் உள்ளடக்குவது தான் கேலிக்கை.
விசேட தேவை என்பது சாதாரண இயல்பு நிலையில் இருந்து வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்டோர். (உ.தா- சாதாரணமாக ஒரு குழந்தை பிறக்கும் போது ,இயற்கையான சீரான இயங்கு நிலையில் இருத்தல் என்பது இயல்பு. இதில் ஏதேனும் ஒரு உயிரியல் தாக்கம், மாறுபட்ட இயல்பு நிலையோடு ஒரு குழந்தை பிறத்தல் என்பது சிறப்பு நிலை. இந்த சிறப்பு நிலை குழந்தைகள், 90 வீதமான இயல்புநிலை குழந்தைகளின் வாழ்க்கை முறையிலிருந்து வேறுபட்ட வாழ்க்கை முறையை கொண்டிருப்பதால் அவர்களுக்கான சில விசேட தேவைகளை ஏற்படுத்தி கொடுத்தல் அவசியமாகிறது. அது அவர்களுக்கான அடிப்படை தேவையும் கூட. ஆனால் பொதுவாகவே பெண்கள் என்ற பாலினத்திற்கு மாதவிடாய் என்பது இயற்கையானதும், இயல்பானதும் அதை விசேடத்துக்குள் உட்புகுத்துவதே பெண்களை இந்த சமூகத்தில் ஆண் பாலினத்தோடு ஒப்பிட்டு பிரித்து நோக்குதலுக்குரியது. )
கடந்த 26 ஆம் திகதி ஸ்கொட்லாந் நாட்டில் பொது இடங்களில் சாண்ட்டரி நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யும் சட்டமூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பொது இடங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு தேவையான சாணிட்டரி நாப்கின்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்க வகை செய்யும் சட்டமூலம் ஸ்காட்லாந்து நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
‘மோனிகா லெனான்’ என்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர், இந்த சட்டமூலத்தை தாக்கல் செய்திருந்தார். வறுமை காரணாமக சாணிட்டரி நாப்கின் மற்றும் அது சார்ந்த பொருட்களை சில பெண்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படுவதால் அந்த பொருட்களை நாட்டு பெண்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டது.
குறித்த சட்டமூலம் மீதான விவாதம் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு பின் சாணிட்டரி நாப்கின்கள் மற்றும் அதுசார்ந்த பொருட்களை பெண்களுக்கு இலவசமாக வழங்க வகை செய்யும் சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
குறித்த வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 121 உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர். இதன் மூலம் சட்மூலம் சட்டமாக உருவாகியுள்ளது.
இதையடுத்து, பெண்களுக்கு சாணிட்டரி நாப்கின்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு என்ற பெருமையை ஸ்காட்லாந்து பெற்றுள்ளது. மேலும், ஸ்காட்லாந்து அரசின் முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இலங்கையில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நப்கின்களில் இறக்குமதியாகும் நப்கின்களுக்கு 15 வீத வரியை கூடுதலாக அறவிட கடந்த வரவு செலவுதிட்த்தில் முன்மொழியப்பட்டிருக்கிறது. இதற்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதும் அது வெறுமனே செய்தியோடு நின்று விட்டது.
இதேபோன்றதொரு நிலமை எமது அயல்நாடான இந்தியாவிலும் ஏற்பட்டிருந்தது. சனத்தொகை அதிகமான நாடு இந்தியா. அங்கும் நாப்கினுக்கான வரியை 12 வீதமாக அதிகரித்திருந்தது அந்நாட்டு அரசு. ஆனால் மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக குறித்த திட்டம் கைவிடப்பட்டது. இன்றைக்கு அதன் மாற்று வழியாக நப்கின் தயாரிப்பு குடிசை கைத்தொழிலாக மாறியிருக்கிறது.
இந்தியா முழுவதிலும் அரச உதவியுடன் நாப்கினை பெண்கள் குடிசை கைத்தொழிலாக தயாரிக்கின்றனர். நாப்கின் தயாரிப்பு வகுப்புக்கள் மாநில அரச திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. அதனை அவர்கள் நடைமுறைப்படுத்துவதற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.(வங்கி கடன்களும் வழங்கப்படுகிறது) இதனால் மிக குறைந்த விலையில் நப்கினை பெற்று கொள்ள கூடிய சூழல் அங்குள்ளது. உண்மையில் பல பிரபல நிறுவனங்களின் நப்கின்களுக்கு போட்டியாக, ஆரோக்கியமான முறையில் நப்கின்களை குடிசை கைத்தொழிலாளர்கள் தயாரிக்கிறார்கள் என்பது இந்தியாவின் பெருமை.
ஆனால் எங்களுடைய இலங்கையில் நாப்கின் உற்பத்தி வீதம் மிக குறைவு. மிக இலகுவான உற்பத்தியாக கருதப்படும் நாப்கின் கூட மிக குறைந்த உற்பத்தியே. ஓர் இரு நிறுவனங்கள் தான் செயற்படுகின்றன. எனவே நாப்கினை கூட அதிகளவில் இறக்குமதி செய்யும் நிலையில் எங்களுடைய நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கிறது.
இப்படியிருக்கையில் தான் குடிசை கைத்தொழில் தொடர்பிலும், தன்னிறைவு பொருளாதாரம் தொடர்பிலும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
தன்னிறைவு பொருளாதாரம் என்னும் போது, பல்வேறு வழிகளை யோசிப்பவர்கள் ஒரு நிமிடம் பெண்கள் சார்ந்து சிந்தியுங்கள்.
எங்களுடைய நாட்டில் குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு பகுதியில் அபிவிருத்தியும், தொழில்வாய்பின்மையும் மிக பெரிய பிரச்சினை. அதனை சாட்டு வைத்தே இம்முறை தேர்தலிலும் பலர் களமிறங்கியிருந்தனர். ஆனால் தேர்தல் முடிந்து பின்னர் அவர்கள் என்ன மாற்றத்தை கொண்டுவர முனைந்திருக்கிறார்கள்?
இந்தியாவின் நாப்கின் குடிசை கைத்தொழில் திட்டம் இலங்கைக்கும் பொருத்தமானதே. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 90 ஆயிரிம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளனர். இவர்களில் பலர் வேலை வாய்ப்பின்மையால் அவதியுறுகின்றனர். எங்களுடைய சமூகக்கட்டுபாடுகளை பொறுத்தமட்டில் ஒரு கணவனை இழந்த பெண் இன்னொருவருக்கு கீழ் பணிபுரிவதை விட சுயதொழில் புரிவதே பாதுகாப்பானது என்பதை பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்ப தலைவிகளுடன் பேசினால் அறிவீர்கள்.
எனவே இவர்களை மையப்படுத்தி குடிசை கைத்தொழில் திட்டமாக நாப்கின் தயாரிப்பை கொண்டுவருதலும் கூட தன்நிறைவுப் பொருளாதார மேம்பாட்டுக்கான ஒரு பாகம் தான்.
இப்படியாக ஆயிரம் தேவைகளும், வழிகளும் இருக்கும் போது, தற்போதைய அரசு 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இறக்குமதியாகும் நாப்கின்களுக்கு 15வீத வரியை முன்மொழிந்துள்ளது. கடந்த தேர்தல் காலங்களின் போது பெண் வேட்பாளர்களை உள்ளீர்த்திருந்த கட்சிகளில், குறிப்பாக தென் இலங்கையில், மாதவிடாய் தொடர்பிலும், பெண்களின் சமத்துவம் மற்றும் பாதகாப்பு தொடர்பிலும் பிரச்சாரங்கள் இடம்பெற்றதை அவதானித்திருப்பீர்கள். தேர்தல்கள் முடிந்து ஒருவருடங்கள் முடியவில்லை இந்த அரசு பெண்களின் சுகாதாரத்தை கேள்க்குட்படுத்தியுள்ளது.
இதற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெண் உறுப்பினர்கள் கடந்த 24 ஆம் திகதி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதை ‘மென்சஸ் வரி’ என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ரோகிணி காவிரத்ன மற்றும் அண்மையில் அரச தரப்பிற்கு தாவிய டயானா கமகே ஆகியோர் ஆட்சேபனைகளை எழுப்பினர்.
1848 ஆம் ஆண்டில் அப்போதைய ஆளுநர் லார்ட் டொரிங்டன் விதித்த வரியை போன்று இந்த வரிவிதிப்பு அமைந்திருக்கிறது. நப்கின்களை வாங்க முடியாததால் பாசாலைக்கு செல்ல முடியாத நிலமையில் எத்தனையோ பிள்ளைகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என தனது வாதத்தை முன்வைத்தார் எம்.பி. ரோகிணி காவிரத்ன .
அதேபோன்று டயானா கமகே, சானிட்டரி நாப்கின்களிற்கு 15% வாட் வரி விதிக்கும் அரசின் நடவடிக்கையால், நாட்டிலுள்ள பெரும்பாலான பெண்கள் குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவிகள் பெரும் சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார். சானிட்டரி நாப்கின்கள்ளிற்கு 15% வாட் வரி விதிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை கண்டிப்பதாகவும் தெரிவித்தார். 15% வாட் வரியை நீக்கி இதை ஒரு அத்தியாவசியப் பொருளாக மாற்றுமாறு பிரதமர் மற்றும் ஜனாதிபதியை நான் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் மக்கள் தொகையில் 52 சதவீதம் பெண்கள். இது அந்த பெண்களுக்கு சுகாதார மற்றும் மனிதாபிமான பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்தப் பிரச்சினையால் பாடசாலைக்குச் செல்லும் பெண்கள் ஐம்பது சதவீதம் பேர் பாடசாலைக்குச் செல்வதில்லை. எனவே,இது குறித்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ஐம்பது சதவீத மகள்கள் ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கு செல்வதில்லை. நிதி அமைச்சர் இன்று இங்கே இருக்கிறார். அவர் கவனம் செலுத்துவார் என்று நான் நினைக்கிறேன்’ என கூறியிருந்தார்.
இதில் உள்ள அரசியல் என்ன என்பதை கடந்து, நாப்கினின் விலை அதிகரிப்பு என்பது சாதாரண குடும் பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறும். இன்றைக்கும் நப்கின் வாங்க வசதியில்லாத குடும்பங்கள் இருக்க தான் செய்கிறது.
இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் காலத்தில் முதல் இரண்டு நாளுக்கும் நாப்கின் பயன்படுத்திவிட்டு, ஏனைய நாட்களில் வீட்டில் பாவித்து நீத்து போன ஆடைகளை வெட்டி அந்த துணியை பாவிக்கும் நிலமையில் வாழ்ந்து கொண்டடிருக்கிறார்கள் என்பதை எவரராலும் மறுக்க முடியாது.
ஏன் புடவைக்கடைகளில் பணி புரியும் பல பெண்கள், மற்றவர்களுக்கு நாப்கினை விற்பனை செய்யும் பெண்கள், தாங்கள் நாப்கின் வாங்கி பயன்படுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். பல பெண் பிள்ளைகள் நாப்கின் வாங்க பணம் இல்லாத காரணத்தால் மாதவிடாய்காலத்தில் பாடசாலைக்கு செல்ல முடியாதவர்களாக இருக்கிறார். இவற்றை மறுப்பவர்களுக்கும், நகைச்சுவையாக கடப்பவர்களுக்கும் புரியாது அந்த பெண்பிள்ளைகளின் அந்த நொடிப்பொழுதிலான வேதனையும், அசௌகரியமும்.
கணக்கெடுப்பின்படி இலங்கையில் 52 வீதமான பெண்களில் 30 வீதமானவர்களே நாப்கின் பயன்படுத்துபவர்கள். இந்த நிலையை மாதவிடாய் வறுமை என்பார்கள். இந்த கருத்தியலை முதன் முதலில் பேசிய நாடு ஸ்கொட்லாந்து. இன்றைக்கு இது உலகம் முழுவதிலும் பேசப்பட்டாலும் ஜரோப்பிய நாடுகள் உட்பட இந்தியா போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும். இதற்கான அங்கீகாரம் ஓரளவேனும் கிடைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
ஆனால் இலங்கையில் மாதவிடாய் தொடர்பில் பேசுவதை கேலிக்கையாக பார்ப்பதில் இருந்து நாம் இன்னும் முன்னேறவில்லை.
எனவே இந்த வரி உயர்வுக்கு பின்னால் இருக்கும் அரசியலை கடந்து, இதனால் பாதிக்கப்படப்போகும் பெண்களுக்காக இதை தடுத்து நிறுத்த பெண்கள் குரல் கொடுப்பது அவசியம். மாதவிடாய் காலம் என்பது பெண்களுக்கான அத்தியாவசிய தேவைக்காலம் என்பதை உணர்த்த வேண்டிய தேவை பெண்களுக்குள்ளது. ஸ்கொட்லாந்து நாட்டை போன்று பொது இடங்களில் இலவசமாக வழங்க முடியாவிட்டாலும், நாப்கின் அனைத்து தரப்பு பெண்களுக்கும் சென்றடையும் படி வழிவகை செய்தல் அவசியமாகின்றது.
எல்லா இடங்களிலும் வழங்க முடியாவிட்டாலும், பாடசாலைகளில் இலவச மதிய உணவு வழங்குவதை போன்று இலவச நாப்கின்களை மாணவிகளுக்கு வழங்குதலும் சிறந்த நடைமுறையாகவே இருக்க முடியும். எல்லாவற்றிற்கும் முதல் நாப்கின்களை குறைந்த விலையில் அனைவரும் பெற்று கொள்ளும் நிலமை உருவாக வேண்டும்.
இது தொடர்பில் பெண்நிலை செயற்பாட்டாளர் -நளினி ரட்ணராஜ் (கொழும்பு)
இறக்குமதியாகும் நாப்கின்களுக்கு 15வீத வரிவிதிப்பானது நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமே தவிர பொருளாதாரம் மேம்பட உதவாது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இறக்குமதியாகும் நாப்கின்கள் (அணையாடை) பெண்களின் பிரத்தியேக அடிப்படை தேவை. இலங்கையின் சனத்தொகையில் 2.9 வீதம் மக்கள் வறியவர்கள் என்பது ஆய்வுகள் கூறும் கணக்கெடுப்பு. இந்த வறுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு நாப்கின் வாங்குதல் என்பது மிகப்பெரிய சவாலான விடயம். அந்த குடும்பங்களில் பெண் பிள்ளைகள் நாப்கின் இல்லை என்ற காரணத்தினால் மாதத்தில் 2 நாள் அல்லது 3 நாள் பாடசாலைக்கு செல்லாமல் தவிர்க்கின்ற நிலமை சமூகத்தில் உள்ளது.
நாட்டின் சனத்தொகையில் 52 விதமானோர் பெண்கள். பல குடும்பங்கள் பெண்களின் உழைப்பில் தான் இயங்குகின்றன. இன்னும் பல குடும்பங்கள் ஆண் பெண் இருபாலாரின் உழைப்பில் தங்கியிருங்குகின்றன. தொழில் புரியும் பெண்களில் பெரும்பாலான பெண்கள் முறைசாரா தொழில்களில் ஈடுபடும் பெண்களாக உள்ளனர். ஆனால் இலங்கையின் பொருளாதாரத்தின் ஒரு பகுதி முறைசாரா தொழிலில் ஈடுபடும் பெண்களை சார்ந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தரவுகள் அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. (முறைசார தொழில் என்பது மீன் வியாபாரம், சந்தை வியாபாரம், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள்) இப்படி உழைக்கும் பெண்களால் தான் நாட்டின் ஒரு பகுதி பொருளாதாரம் நிரவப்படுகிறது.
இப்படியாக தம்மை வருத்தி தொழில்புரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நாப்கின்கள் வாங்குவதற்கு போதுமான பணம் அந்த காலப்பபகுதியில் கிடைப்பதில்லை. முற்கூட்டியே தயார் நிலையில் இருப்பதற்கு பொருளாதாரம் அவர்களுக்கு ஈடுகொடுப்பதும் இல்லை. எனவே இன்றைக்கு வரைக்கும் இப்படியான தொழில் புரியும் பெண்களில் பாதி பேர், நப்கின்களுக்கு பதிலான துணிகளை (சுகாதாரமற்ற முறையில்) பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. இப்படியானவர்களுக்கு நாப்கின்களை இலவசமாக கொடுக்க வேண்டிய கடமை அரசுக்குள்ளது. ஆனால் அதை விடுத்து இப்படி வரியை உயர்த்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
பெண்களுக்கான பிரத்தியேக அமைச்சு இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கு வரவு செலவு திட்டத்தில் கூட பெண்கள் சார்ந்த செயற்பாடுகளுக்கு தான் மிக குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசு தேசிய பாதுகாப்பிற்கு ஒதுக்கியிருக்கும் பெருந்தொகை நிதியில் 1 வீதத்தை நாப்கின்களுக்காக ஒதுக்க முடியும். வரியை கூட்டாமல் தேசிய பாதுகாப்பிற்கு ஒதுக்கிய பெருந்தொகை நிதியில் 1 வீதத்தை எடுத்து பெண்களுக்க நாப்கின்களை இலவசமாக வழங்க வேண்டும். உள்ளுர் பொருட்களை பாவித்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இப்படி வரியை உயர்த்துவதால் பாதிக்காலம் பெண்கள் தொழில் புரிவதில் சிரமத்தை உண்டுபண்ணும். இது நாட்டின் அபிவிருத்தியில் மறைமுகமான பாதிப்பை தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டிருக்கும். ஆகவே வரியை உயர்த்துவதை விடுத்து பாதுகாப்பிற்கு ஒதுக்கிய நிதியில் 1 வீதத்தை பெண்களுக்கு ஒதுக்கினால் முறைசார் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகளுக்கு நாப்கினை இலவசமாக வழங்க முடியும்.
பெண்நிலை செயற்பாட்டாளர் -ரஜனி ராஜேஸ்வரி (யாழ்ப்பாணம்)
பெண்கள் தங்கள் அன்றாட தேவைகளை அடிப்படை உரிமைகளை பெற்று கொள்வதே சவாலாக இருக்கும் போது, தற்போதைய அரசு, நிதி பாதீட்டு ஊடாக (அணையாடை) நப்கினுக்கு 15 வீத வரி அறவிடுவதாக கூறியுள்ளது. இது பாராதூரமான பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஜயப்பாடும் இல்லை. எத்தனையோ அநாவசிய இறக்குமதியில் கவனம் செலுத்தாமல் பெண்களின் அத்தியாவசிய மற்றும் சுகாதரம் தொடர்பான விடயத்தில் கைவைக்கிறது இந்த அரசு. குறித்த நாப்கின் சாதாரணாகவே அனைத்து தரப்பு மக்களினாலும் பெற்றுக்கொள்ள முடியாத நிலமை இருக்கிறது. கிராமப்புறங்களில் நாப்கின் வாங்க முடியாத பிள்ளைகள் சுகாதாரத்து கேடான வகையில் அணையாடைகளை தாங்களே உருவாக்கி கொள்ளும் நிலமை அப்படியே தான் உள்ளது. இப்படியிருக்க அரசினுடைய இந்த வரி உயர்வு நாப்கினின் விலை உயர்வை அதிகரிக்கும். உள்ளுர் உற்பத்தியை அதிகரிக்காமல் இப்படியாக வரியை அதிகரிப்பது பொருளாதாரத்தையும் உயர்த்த போவதில்லை, பெண்களுக்கும் கைகொடுக்கப்போவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு அதிகரிப்பதோடு பெண்கள் கல்வி, தொழில் என அன்றாட கடமைகளில் ஈடுபடுவதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
இந்த அரசு தேசிய பாதுகாப்பிற்கு ஒதுக்கியிருக்கும் நிதியில் குறிப்பிட்டளவு நிதியை பெண்களுக்கு நாப்கினை இலவசமாக கொடுக்க ஒதுக்க முடியும். அதேவேளை உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து பெண்களுக்கான வேலை வாய்ப்பு தேவையை நிறைவேற்ற முடியும். எனவே வரி உயர்வு என்பது பெண்களின் அடிப்படை தேவையில் இடையூறை ஏற்படுத்தி பொருளாதார மற்றும் சுகாதார சீர்கேட்டை விளைவிப்பதாகவே அமைகிறது.
மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர்-உதயனி நவரத்தினம் (யாழ்ப்பாணம்)
நாப்கின் என்பது பெண்களின் அத்தியாவசிய தேவை. இந்த வரி உயர்வானது அவர்களின் சனிட்டரி நாப்கின் வாங்குபவர்கள் விதத்தை மேலும் குறைக்கிறது. ஏற்கனவே சுகாதார நலன் கருதி பெண்கள் நாப்கினை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற விடயத்தில் 100 வீதம் பெண்கள் ஈடுபடாத நிலையில் இந்த விலை உயர்வு டமேலும் சுகாதார பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அன்றாடம் கூலிக்கு தொழில் புரியும் பெண்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படப்போகிறார்கள். அவர்களின் வாழ்வின் அத்தியாவசிய செலவில் மேலதிக செலவாக இந்த வரியுயர்வு அமைகிறது. நாப்கினை நுகர்வதில் உள்ள சிரமம் காரணமாக பெண்களிடையே சுகாதார சீர்கேடு அதிகரிக்கும் போது இந்த சமூகத்தில் பெண்கள் புற்றுநோய், தோல் நோய் என்ற பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். எனவே அதனை கருத்தில் கொண்டு இந்த அரசு வரி அதிகரிப்பை மீளப்பெறுவது அவசியமாகின்றது.
பெண்கள் பயன்படுத்தும் சுகாதார நாப்கின்கள் மீதான வரிகளை அரசு 15 வீதம் அதிகரித்திருக்கிறது. இது 52%-53.6% வரையான அதிகரிப்பாகும். 2021க்கான வரவு செலவில் இந்த 15% வரிவீத அதிகரிப்பு நிகழ்துள்ளது. நாப்கினுக்கு 15% வரியை அதிகரித்திருக்கும் அரசு பொது கடமைகளுக்கு 30% – 15% வரை குறைத்திருக்கிறது. ஒப்பீட்டளவில் + 1.6% நப்கினுக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு கணக்கீட்டின் எல்லையில் சில சேவைகளை நிரவும் பொருட்டு இறக்குமதி நாப்கின்களின் வரி அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் சுகாதார நாப்கின்கள் மீதான வரி வீதம் 101.2% இருந்தது, இது 2018 இல் 62% ஆகக் குறைக்கப்பட்டது, மேலும் 2019 டிசம்பரில் ஒட்டுமொத்த வாட் குறைப்பாக மொத்த வரிகளை 52% ஆக குறைக்கப்பட்டிருந்தது.
இந்த வரிவிதிப்பானது நப்கின் நுகர்வோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதோடு, உள்ளூர் உற்பத்தியாளர்களின் பொருளாதார வாடகையை பாதுகாக்கிறது. உள்ளூர் உற்பத்தியாளர்கள் பெரிய நிறுவனங்கள். எனவே அவர்கள் அவர்கள் நுகர்வோரிடம் அதிக விலைக்கு நப்கினை விற்க நேரிடும். இந்த பிரச்சினையில் நாட்டில் உள்ள 5.7 மில்லியன் பெண்கள் சிக்க கூடும்.
எனவே இந்த சுகாதார நாப்கின்கள் பெண்களுக்கு அவசியமான பொருட்கள். பொருளாதார முன்னோக்குடைய எந்தவொரு அரசாங்கமும் பொருட்களின் மலிவு மற்றும் உள்ளூர் தயாரிப்புகளின் தேர்வுக்கு தான் முன்னுரிமை கொடுக்கும்.
அரசின் இந்த வரவு செலவு திட்ட நடைமுறை உள்ளூர் உற்பத்தியின் தோல்வியையே எடுத்துரைக்கிறது.
சராசரியாக ஒரு பெண்ணுக்கான மாதவிடாய் 3-7 நாட்கள் வரை இருக்கும். அண்ணளவாக 13 வயது தொடக்கம் 51 வயது வரை ஒரு பெண்ணின் மாதவிடாய் காலம் இருக்கிறது. கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் வரை 450 கால சுழற்சிகளை அனுபவிக்கிறாள் ஒரு பெண். கிட்டத்தட்ட வாழ்நாளில் 2,280 நாட்கள் மாதவிடாய் ஆகும். இது அண்ணளவாக சில பெண்களுக்கு 7 நாள் என்றிருக்கையில் அதிகரிக்க கூடும்.
ஒரு சனிட்டரி நாப்கின் பையில் 10 நப்கின்கள் இருக்கும். ஒரு பையின் விலை ரூ. 125 முதல் ரூ. 520 வரை. (ப்ராண்ட்டடிற்கு ஏற்ப விலை) சாதாரணமாக 125 ரூபா நாப்கினை வாங்கும் பெண்கள்(தரவுகளின் படி நாட்டில் அதிகமான பெண்கள் இதை தான் வாங்குகிறார்கள்) மாதம் ஒரு பை வாங்கினாலே வருடம் 1500 ரூபா. உண்மையில் சீரான சுகாதார நடைமுறையை பின்பற்றுபவர்களுக்கும், உடல் நிலமைக்கு ஏற்ப அதீத ரத்தப்போக்குடையவர்களுக்கும், ஒரு நாளுக்கு குறைந்தது 3-4 நப்கின்கள் தேவைப்படும். அப்படியாக 5 நாட்களுக்கும் 2 பைகள் தேவைப்படும்.
எனவே தற்போதிருக்கின்ற விலையான 125 ரூபாவை செலுத்தி நாப்கின் வாங்க முடியாத பெண்கள் தான் இலங்கையையில் அதிகம். அப்படியிருக்கையில் இந்த வரி உயர்வு நாப்கின் கொள்வனவை கட்டுப்படுத்துமே தவிர அதிகரிக்காது.
எனவே இதனை இரண்டு வகையாக நோக்கலாம். ஒன்று நாப்கின்களை பாவிப்பதிலும் பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு தூண்டப்படுகிறது. அத்துடன் நாப்கினை வாங்கமுடியாத நிலமையில், சுகாதாரததிற்கு கேடான மாற்று வழிகளை பெண்கள் நாடும் போது ,தொற்று நோய்கள் மற்றும் தோல்நோய்களின் பரவலாக்கம் அதிகரிக்கும். இது பிறிதொரு வழியில் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே எந்த வழியில் பார்த்தாலும் இந்த விலை உயர்வு ஒருபோதும் நாட்டின் பொருளாதாரத்தை ஈடு செய்யப்போவதில்லை. மாறாக ஏற்றதாழ்வுகளையும், விளைவுகளையும் அதிகரிப்பதாகவே உள்ளது.
by: M.kemasiya pirabakaran
நன்றி : தமிழ் பக்கம்