யாழ்.மாநகர சபையின் முதல்வராக இன்று முன்நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களில் யார் வெல்லப்போகிறார்கள் என்பது தொடர்பில் இரண்டு தரப்புக்கும் தெளிவான ...
யாழ்.மாநகர சபையின் முதல்வராக இன்று முன்நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களில் யார் வெல்லப்போகிறார்கள் என்பது தொடர்பில் இரண்டு தரப்புக்கும் தெளிவான முடிவில்லை என்று நம்பகரமாக தெரியவந்துள்ளது.
யாழ்.மாநகரசபையின் வரவு செலவுத்திட்டம் 2 தடவைகள் தோல்வியடைந்ததால் அதன் முதல்வர் பதவியிலிருந்து ஆர்னோல்ட் வெளியேற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இன்று புதிய முதல்வர் தெரிவு முன்மொழியப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆர்னோல்ட்டை நிறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த முறை முதல்வர் தெரிவு இடம்பெற்றிருந்தபோது ஈபிடிபி ஆதரவுடனேயே கூட்டமைப்பு ஆட்சி பீடம் ஏறியிருந்தது.
அதுவும் கூட்டமைப்பின் தலைவர் மாவை சேனாதிராஜா ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதற்கிணங்கவே குறித்த ஆதரவு வழங்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், சற்று முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஊடகவியலாளர்கள் தொடர்புகொண்டு யாருக்கு ஆதரவு வழங்கப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்,
அதற்கு பதிலளித்த அவர்,
இதுவரை எந்தத் தரப்புக்கு ஆதரவு வழங்குவது என்று தீர்மானிக்கவில்லை. ஒரு தரப்பும் எங்களுடன் பேச்சு நடத்தவும் இல்லை. இறுதி நேரத்திலேயே யாருக்கு ஆதரவு என்று முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று மாலை, தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்துக் கலந்துரையாடிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் முக்கியஸ்தரும் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வி.மணிவண்ணன், தான் முன்னணி சார்பில் முதன்மை வேட்பாளராக இன்று முன் நிற்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழரசுக்கட்சியின் உயர்மட்டத் தகவல்களின் அடிப்படையில் தமிழரசுக்கட்சி ஈபிடிபியுடன் பேச்சில் ஈடுபடவில்லை என்றே தெரிகிறது.
அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எந்தச் சந்தர்ப்பத்திலும் ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சியமைக்கப்போவதில்லை என்று ஊடகங்களில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
ஆதரவு குறித்து கருத்துத் தெரிவித்த மணிவண்ணன், தாமும் யாருடனும் பேச்சு நடத்தவில்லை என்றும் ஊடகங்கள் ஊடாகவே பொதுவான அழைப்பினை விடுத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தரப்புக்களும் இரண்டு நிலைப்பாட்டுடன் காணப்படுவதால்,இன்று இக்கட்டான நிலையையே இரண்டு பிரதான உறுப்பினர்களும் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்படும் என்று தெரியவருகிறது.
இதேவேளை, குறுந்தகவல்கள் ஊடாக கோரிக்கை விடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்துமூலமான கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு தமிழரசுக்கட்சி செவிசாய்க்காமையை ஈபிடிபி சாதகமாக எடுத்துக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுகிறது.
இதேவேளை இன்னொரு பக்கத்தில் கூட்டமைப்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவான சிலர் மணிவண்ணனை ஆதரிக்கக்கூடிய சூழலும் காணப்படுவதாகவும் பேசப்படுகிறது.
இதனிடையே இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அது ஆர்னோல்ட்டுக்கு பாதகமாகவும் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தினால் அது மணிவண்ணனுக்கு பாதகமாகவும் அமையும் என்கின்றனர் பெயர் குறிப்பிடவிரும்பாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சபை உறுப்பினர்கள் சிலர்.
இதேவேளை, ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டு தரப்பையும் சிக்கலுக்குள் தள்ளக்கூடியதாக வாய்ப்பாக மணிவண்ணனை ஆதரிப்பதை அமைச்சர் டக்ளஸ் கைக்கொள்ளக்கூடும் என்கின்றனர் அவதானிகள்.
எனவே, இன்று காலை பரபரப்பானதாகவே மாநகரசபை முதல்வர் தெரிவு இடம்பெறும் என்பது வெளிப்படை.
யாழ்.மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 16
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 13
ஈழமக்கள் ஜனநாயக் கட்சி - 10
ஐக்கிய தேசியக் கட்சி - 03
சுதந்திரக்கட்சி - 02
தமிழர் விடுதலைக் கூட்டணி - 01