இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற யாழ் மாநகர வரவு செலவுத்திட்டம் ஏற்கனவே மக்கள் பார்வைக்கு முன் முன்வைக்கப்படவில்லை என்ற காரணத்தைச் சுட்டிக...
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற யாழ் மாநகர வரவு செலவுத்திட்டம் ஏற்கனவே மக்கள் பார்வைக்கு முன் முன்வைக்கப்படவில்லை என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரை ஆரம்பம் முதலே திட்டமிட்டு அதனை பிற்போடுமாறு கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்துணிவின் அடிப்படையில் யாழ் மாநகர வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகரசபையின் வரவு செலவு திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
திடீர் நகர்வின் மூலம் யாழ் மாநகரசபையை கைப்பற்றிய வி.மணிவண்ணன் தரப்பின் எதிர்காலம் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
யாழ் மாநகரசபை முதல்வராக பதவிவகித்த இ.ஆர்னோல்ட் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனமையினால், பதவியிழந்தார். அதை தொடர்ந்து நடந்த புதிய முதல்வர் தெரிவில் வி.மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.
இந்த நிலையில் வி.மணிவண்ணன் இன்று தனது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கிறார்.
வி.மணிவண்ணன் தரப்பின் 9 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 1 உறுப்பினர், ஈ.பி.டி.பியின் 11 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், வரவு செலவு திட்டத்தில் 21 வாக்குகள், மணிவண்ணன் தரப்பிற்கு நிச்சயம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தரப்புக்களை தவிர, எதிரணியில் 23 வாக்குகள் உள்ளன. முதல்வர் தெரிவை போல, இம்முறையும் வேறு தரப்புக்கள் மறைமுக ஆதரவு வழங்கினால் அல்லது வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்தால் மாத்திரமே மணிவண்ணன் தரப்பு வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.