சம்மந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோர் இந்த நாட்டில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் இருந்தும்கூட நாட்டின் சட்ட கட்டமைப்புக்குள் அப்பால் சர்வ...
சம்மந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோர் இந்த நாட்டில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் இருந்தும்கூட நாட்டின் சட்ட கட்டமைப்புக்குள் அப்பால் சர்வதேசத்தை கொண்டிருப்பதையும், சர்வதேசத்துக்கு அனுப்பிக் கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லையென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் இலங்கையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை முன்னெடுப்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் கண்காணிப்பை செய்ய வேண்டும் என்றும் கோரி தமிழ்தேசிய கட்சிகளின் மூன்று தலைவர்களும் கையொப்பமிட்டு ஐநா மனித உரிமைப் பேரவைக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.
அது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
சம்மந்தன் விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் ஆகியோர் இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதுடன் அரசியலமைப்புக்கு உட்பட்ட சத்தியபிரமாணம் செய்திருக்கிறார்கள். சட்டத்தரணிகள் ஆக இருக்கின்ற இந்த மூவருக்கும் நாட்டின் அரசியலமைப்பு எவ்வாறான விடயங்களை அனுமதிக்கும் எவ்வாறான விடயங்களை அனுமதிக்காது என்பதும் உயர்நீதிமன்றம் இந்த நாட்டின் சகல பிரஜைகளும் அடிப்படை உரிமையை உறுதிப்படுத்தும் ஒரு நிறுவனமாக செயல்படுகிறது என்பதும் நன்றாக தெரியும்.
அவ்வாறு இலங்கையின் அரசியலமைப்பை நன்றாக தெரிந்திருந்தும் கூட இவர்கள் இவ்வாறு சர்வதேசத்திற்கு கடிதங்களை அனுப்பிக் கொண்டிருப்பதை என்னவென்று கூறுவது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இந்த தமிழ் கட்சிகள் இதனைத்தான் செய்துகொண்டிருக்கின்றனர். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துவதற்கு உயர்நீதிமன்ற காணப்படுகின்றது.
நாட்டின் எந்தவொரு பிரஜையும் தனக்கு இழைக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியும். அடிப்படை உரிமை இலங்கையின் அரசியலமைப்பின் ஊடாக மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனைச் செய்யாமல் சம்மந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றோர் ஏன் இப்படி சர்வதேசத்திற்கு கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
ஆனால் இவர்கள் இவ்வாறு செய்வது ஒரு புதிய விடயமல்ல. ஒவ்வொரு வருடமும் அவர்கள் இதனைத்தான் செய்து கொண்டிருப்பதுடன் அரசாங்கத்தை சர்வதேசத்தின் மத்தியில் கெட்டதாக காட்ட முயற்சிக்கின்றனர்.
முக்கியமாக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்த அளவு நல்ல வேலைத்திட்டங்களை செய்தாலும் அவற்றை மாற்றியே சர்வதேசத்திற்கு காட்டுவதையே இவர்கள் மூன்று தலைவர்களும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டத்தரணிகள் இருக்கும் இவர்கள் அரசியலுக்கு வந்தவுடன் நாட்டில் அரசியலமைப்பு பற்றி தெரியாத வகையில் செயற்படுகின்றனர். ஒரு கட்டத்தில் அரசியலமைப்பில் அனுமதி இல்லை என்று தெரிந்தும் வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கையில் நீதிமன்ற செயற்பாட்டில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எப்போதும் சாத்தியமற்ற விடயங்களையே இவர்கள் சர்வதேசத்திற்கு கடிதம் அனுப்பி கோரிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.