இந்திய பாரதீய ஜனதா கட்சியின் செயற்பாட்டு அரசியலை இலங்கையில் ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர்...
இந்திய பாரதீய ஜனதா கட்சியின் செயற்பாட்டு அரசியலை இலங்கையில் ஆரம்பிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது, அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மாநில முதலமைச்சரும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான பிப்லாப் தேப் உரையாற்றிய போது, இந்தியாவையும் தாண்டி பாஜக அதிகாரத்தை பிடிக்க விரும்புவதாக கூறியிருந்தார்.
பாரதீய ஜனதா கட்சியின் செயற்பாடுகளை நேபாளத்திலும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்த அவர், இலங்கையிலும் தமது கட்சியை ஆரம்பித்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் வேறொரு நாடொன்றிலுள்ள கட்சியொன்றை இலங்கையில் பதிவு செய்யவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ இயலுமை கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.
இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியை (BJP) இலங்கையில் ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட கருத்து குறித்து பதில் வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
”இலங்கையில் அவர்களின் கிளையொன்றை ஸ்தாபித்து, தேர்தலில் போட்டியிடுவதற்கான இயலுமை கிடையாது. இலங்கையிலுள்ள கட்சியொன்று என்றால், இலங்கையிலுள்ள பிரஜையொருவரினால் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டு, 4 அல்லது 5 வருடங்கள் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டும். அந்த பின்னர் தேர்தலில் போட்டியிட வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்த கட்சிகளை மாத்திரமே பதிவு செய்ய முடியும். அவ்வாறான கட்சியை மாத்திரமே ஏற்றுக்கொள்ள முடியும். அவ்வாறின்றி, எவ்வாறான அதிகாரத்தை கொண்ட கட்சியாக இருந்தாலும், அதன் கிளையை இலங்கையில் ஆரம்பிக்க முடியாது” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதிலளித்துள்ளார்.
அதேபோன்று, பாரதீய ஜனதா கட்சி, இலங்கையிலுள்ள கட்சியொன்றுடனோ அல்லது கூட்டமைப்பொன்றுடனோ இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா என வினவிய கேள்விக்கும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்திற்கு அமைய, அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இயலுமை கிடையாது என அவர் கூறியுள்ளார்.