மஹாபொல அறக்கட்டளை நிதியம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் 2003ஆம் ஆண்டு ஏற்படுத்தி கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய அந்த நிதியத்திற்...
மஹாபொல அறக்கட்டளை நிதியம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் 2003ஆம் ஆண்டு ஏற்படுத்தி கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய அந்த நிதியத்திற்கு கிடைக்கவிருந்த 164 கோடிக்கும் அதிகளவான பணம், இல்லாமல் போயுள்ளதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது.
மஹாபொல அறக்கட்டளை நிதியத்தின் நிர்வாக குழு, மேற்கொண்டிருந்த தவறான தீர்மானங்கள் காரணமாக குறித்த நன்மை இழக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அறிக்கையையும் நேற்று அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த நிதி இழப்பிற்கு அப்போதிருந்த முகாமைத்துவம் பொறுப்புக்கூற வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹாபொல சட்டத்தின் 3ஆவது சரத்திற்கு அமைய மஹாபொல நிதியம் தொடர்பான நிர்வாகம், மற்றும் முகாமைத்துவம், அதன் நிர்வாக குழுவிற்கு ஒப்படைக்கப்படுள்ள நிலையில், அந்த குழு 2003 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நிதியத்திற்கு நன்மையான மற்றும் அனுபவரீதியான தீர்மானங்களை மேற்கொண்டிருக்கவில்லை.
இதன் காரணமாக மஹாபொல அறக்கட்டளை நிதியத்திற்கு பாரியளவான நிதி இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.