மூத்த அரசியல்வாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை விமர்சனங்களை முன்வைப்பது என்பது தமிழ் மக்களது ஆரோக்கியமான ...
மூத்த அரசியல்வாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை விமர்சனங்களை முன்வைப்பது என்பது தமிழ் மக்களது ஆரோக்கியமான அரசியலை எதிர்காலத்தில் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்படும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்பாட்டாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அரவிந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது
பெறுப்பற்ற விதத்தில் கருத்துகளை தெரிவிப்பதை தவிர்த்து ஆக்கபூர்வமான தளத்தை உருவாக்கி தங்களது கருத்துகளை வாதப்பிரதிவாதங்களூடாக முடிவுகள் எடுக்கக் கூடிய வகையில் பொதுத்தளத்தை சிவில் அமைப்புகள் உருவாக்க முற்பட்ட போதும் அரசியல் சக்திகள், அரசியல்கட்சிகள் ஆதரவு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கிறது.
இந்த நிலைமை காரணமாக தமிழரது அரசியல் சரியான முறையில் கையாளப்படவில்லை. இந்த நிலையை மாற்றுவதற்கு சிவில் சமூகத்துடன் ஒன்றிணைந்து அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து அனைவருக்கும் சமத்துவம் என்ற அடிப்படையில் பொதுத் தளத்தை உருவாக்கி அந்த தளத்தின் ஊடாக சரியான வகையில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும்.
தேர்தலுக்காக மட்டும் இந்த தளத்தை பயன்படுத்தாமல் வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரச்சினையை கையாளக் கூடிய பொது தளமாக பயன்படுத்த வேண்டும்.
மாகாண சபையை இல்லாமல் ஆக்குகின்ற சிந்தனையில் அரசாங்கம் இருக்கின்ற நிலையில் நாங்களும் சிதைவடைந்து போகின்ற வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதை கைவிட வேண்டும்.
தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி செயற்படுகின்ற தமிழ்க் கட்சிகள் பொறுப்புடன் செயற்படுவதன் மூலம் தமிழர் அரசியலை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.