இஸ்ரேலின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரின் தொலைபேசிகள் ஒட்டுக்...
இஸ்ரேலின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகச் பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்பைவேர் என்பது ஒருவருக்குத் தெரியாமல் அவரை உளவு பார்க்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் ஆகும்.
ஆனால், ‘அடையாளம் வெளியிடப்படாத’ வட்டாரங்கள் அளித்துள்ள இந்தத் தரவுகள் உண்மையில்லை என பெகாஸஸ் மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.
பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உருவாக்கிய என்எஸ்ஓ எனும் இஸ்ரேலிய நிறுவனத்தால் உலகெங்கிலும் கண்காணிப்புக்கு உட்பட்டதாகக் கருதப்படும் 50,000 தொலைபேசி எண்களின் பட்டியல் கசிந்துள்ளது. இந்த பட்டியல் குறித்து பிரான்ஸைச் சேர்ந்த லாபநோக்கற்ற ஊடக நிறுவனமான பார்பிட்டன் ஸ்டோரிஸ் புலனாய்வு செய்து செய்தியை வெளியிட்டது.
உலகெங்கிலும் உள்ள சமூக உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் தொலைபேசிகள் இஸ்ரேலின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் உட்பட பலர் அடங்கியுள்ளனர் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
21 நாடுகளைச் சேர்ந்த 200 பத்திரிகையாளர்கள் கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளனர்.
பெகாசஸ் ஸ்பைவேர் ஐபோன்கள் மற்றும் அண்ட்ரொய்ட் சாதனங்களைக் கண்காணித்து, அதில் இருக்கும் மெசேஜ்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றை உளவு பார்த்து ஒட்டு கேட்கிறது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான தொலைபேசியின் மைக்ரோபோன்களையும் இதனால் ரகசியமாக இயக்க முடியும் என்கிறது பார்பிட்டன் ஸ்டோரிஸ்.
இந்த பட்டியல் எங்கிருந்து வெளியானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தங்கள் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லையென என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.
இந்தத் தரவுகள் எங்கள் நிறுவனத்தின் ‘சர்வர்களில்’ இருந்து கசிந்தது என்பதே நகைப்புக்குரியது. ஏனெனில் இந்தத் தரவுகள் எங்கள் கணினிகளின் சர்வர்களில் சேமித்து வைக்கப்படவே இல்லை என்கிறது என்எஸ்ஓ.
பெகாசஸ் மென்பொருள் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதென்றும், இது மனித உரிமை பதிவுகளைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவம், சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் என்எஸ்ஓ கூறியுள்ளது.
குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் குழுக்களை கண்டுபிடிக்கவும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களைக் கண்டுபிடிக்கவும், காணாமல் போன மற்றும் கடத்தப்படும் குழந்தைகளைக் கண்டுபிடிக்கவும், இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களைக் கண்டுபிடிக்கவும், ட்ரோன்களிடம் இருந்து வான் பரப்புகளைப் பாதுகாக்கவும் எங்கள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்றும் என்எஸ்ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்களின் தெலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக பிரபல இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, நெட்வர்க் 18, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற செய்தி நிறுவனங்களின் பணியாற்றும் முன்னணி பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக அந்த இணையத்தளம் கூறுகிறது.
இதுதவிர எப்பி, சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ், அல் ஜசீரா உள்ளிட்ட பல சர்வதேச செய்தி நிறுவனங்களின் பணியாற்றும் செய்தியாளர்களின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.
`உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆதரவாளர்கள் இந்த கண்காணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர், உலகம் முழுவதும் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை இது காட்டுகிறது” என்று ஃபார்பிட்டன் ஸ்டோரிஸின் நிறுவனர் லாரன் ரிச்சர்ட், பிபிசியின் ஷாஷாங்க் சவுகானிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
கண்காணிப்புக்கு உள்ளானவர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி – பிபிசி தமிழ்