கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் வடக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டு...
கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் வடக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கொவிட் -19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டமானது இலங்கையின் மேல் மாகாணத்தில் மட்டும் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
இத்திட்டமானது தற்போது ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை (ஓகஸ்ட் 16) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியை அப்பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி தொடர்பு கொண்டு அவர் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுவதற்கு தகுதியானவரா என்பதனை முதலில் பரிசோதிப்பார். அப்போது கீழ்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.
நோயாளி இரண்டு தொடக்கம் 65 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
கோவிட்-19 நோய்த்தொற்று அறிகுறி எதுவும் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.
கர்ப்பிணித் தாய்மார்களாயின் அவர்கள் 24 வாரங்களிற்குட்பட்ட கர்ப்பவதிகளாக இருத்தல்வேண்டும்.
வேறு நோய் நிலமை உள்ளவர்களிற்கு அந்த நோய் கட்டுப்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
நோயாளியின் வீடானது அவரினை ஏனையவர்களிடமிருந்து நோய் பரவாது தனிமைப்படுத்தி வைத்திருக்ககூடிய வசதிகளை கொண்டிருத்தல் வேண்டும்.
நாளாந்தம் தொலைபேசி மூலம் அவரது நோய் நிலமையினை கண்காணிப்பதற்குரிய தொலைபேசி வசதிகள் நோயாளியின் வீட்டில் இருத்தல் வேண்டும்.
சுகாதார மருத்துவ அதிகாரியினால் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டால், அவரது விவரங்கள் மத்திய சுகாதார அமைச்சினால் இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கணனி மென்பொருளில் தரவேற்றம் செய்யப்படும்.
அதன் பின்னர் மத்திய சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அழைப்பு நிலையத்தில் இருந்து மருத்துவர்கள் தினமும் நோயாளியினை தொடர்பு கொண்டு நோயாளியின் உடல் நிலமையினை கண்காணிப்பர்.
தேவை ஏற்படின் நோயாளியும் அவ் மருத்துவரினைத் தொடர்பு கொள்ளமுடியும்.
நோயாளியின் உடல் நிலமை மோசமடையும் சந்தர்ப்பத்தில் நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியிருப்பின் அத்தகவல் உடனடியாக பிராந்திய தொற்று நோய் மருத்துவ அதிகாரிக்கு வழங்கப்படுவதைத் தொடர்ந்து அவர் அந் நோயாளியினை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளினை செய்வார்.
பிசிஆர் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு நோயாளியும் இவ்வாறு 10 நாள்கள் வீட்டுப்பராமரிப்பில் வைத்திருக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவர்.
மருத்துவர் ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்.